Published : 04 Jul 2014 12:00 AM
Last Updated : 04 Jul 2014 12:00 AM
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் விமான நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரிட்டனில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களை குறிவைத்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர். சிரியா, ஏமன் நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதக் குழுக்கள் இதற்கான சதி வேலைகளில் இறங்கியிருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.உளவுத் துறையினரின் எச்சரிக்கையை உறுதி செய்துள்ள பிரிட்டன் போக்குவரத்துத் துறைச் செயலாளர் பேட்ரிக் இதுகுறித்து நிருபர்களிடம் பேசியபோது, பயணிகளைக் காப்பதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது, பல்வேறு தீவிரவாத அமைப்புகள் மேற்கத்திய நாடுகளை குறிவைத்துள்ளன, நாங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக பிரிட்டன் விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT