Published : 05 Jun 2014 10:00 AM
Last Updated : 05 Jun 2014 10:00 AM
நடுவானில் மாயமான மலேசிய விமானம் இந்தியா அருகே கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசி யத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலை நகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.
செயற்கைக்கோள் ஆதாரங் களின் அடிப்படையில் அந்த விமானம் ஆஸ்திரேலியா அருகே கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அந்தப் பகுதியில் தேடியும் இதுவரை விமானத்தின் சிறிய பாகத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறியிருப்பதா வது: நிலநடுக்கங்களைக் கண்டறிய கடலுக்கு அடியில் அதி நவீன கருவிகள் பொருத்தப் பட்டுள்ளன. அது போன்ற ஒரு கருவியில் மர்ம இரைச்சல் பதிவாகியுள்ளது. அந்த ஒலி மலேசிய விமானத்தோடு தொடர்புடைய தாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
மர்ம ஒலியை ஆய்வு செய்தபோது மலேசிய விமானம் இந்தியா அருகே தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலில் கடைசியாகப் பறந்திருக்கலாம். அப்போது எரிபொருள் தீர்ந்து கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேரில் பார்த்த சாட்சி?
மலேசிய விமானம் மாயமான நேரத்தில் பிரிட்டனைச் சேர்ந்த கேத்தரின் என்பவர் இந்தியாவின் கொச்சி நகரில் இருந்து தாய்லாந்துக்கு படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு விமானம் தீப்பிடித்து கடலில் விழுவதை அவர் பார்த்துள்ளார்.
இதுபோல் ஏற்கெனவே பலர் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருப்பதால் கேத்தரின் தெரிவித்துள்ள தகவல்கள் குறித்து ஆஸ்திரேலிய விமானப் படை ஆய்வு நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT