Published : 08 Feb 2020 09:04 PM
Last Updated : 08 Feb 2020 09:04 PM
தாய்லாந்தின் நாகன் ரட்சாமிஸா நகரில் ராணுவ வீரர் ஒருவர் எந்திரத் துப்பாக்கியால் அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் 17 பேர் கொல்லப்பட்டனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்கள் பரந்து கிடப்பதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுட்டவர் ராணுவ மேஜர் ஜக்ராபந்த் தோமா என்று போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவரை இன்னும் போலீஸார் கைது செய்யவில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் காங்சீப் தந்தராவனித் நிருபர்களிடம் கூறுகையில், " ராணுவ முகாமிலிருந்து எந்திரத் துப்பாக்கியைத் திருடிய மேஜர் ஜக்ராபந்த் தோமர், அங்கிருந்து புறப்படும் முன் ஒரு அதிகாரியைக் கொலை செய்துள்ளார்.
அதன்பின் ராணுவத்துக்குச் சொந்தமான காரைத் திருடிக் கொண்டு சென்ற தோமர், பவுத்த கோயிலிலும், அதைத் தொடர்ந்து ஷாப்பிங் மாலிலும் தோமர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். முதல் கட்ட தகவலில் 17 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த கொலைச் சம்பவத்தை நிகழ்த்தும் முன் தோமர் தனது பேஸ்புக் பக்கத்தில் நான் துப்பாக்கியால் சுடுவதை நிறுத்த வேண்டுமா எனக்கேட்டுள்ளார். எதற்காக இப்படிச் செய்தார் எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஷாப்பிங் மாலில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சியை ஆய்வு செய்தபோது, தோமர் துப்பாக்கியால் சுடத் தொடங்கியவுடன் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும், இந்த படுகொலையை நடத்தும் முன் ஒரு வீட்டுக்குச் சென்ற அங்கிருந்த இருவரைச் சுட்டுக் கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
ராணுவ மேஜர் தோமரைப் பிடிக்க ராணுவத்தினரும் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT