Published : 12 Nov 2025 02:50 PM
Last Updated : 12 Nov 2025 02:50 PM
வாஷிங்டன்: H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாரா இங்க்ராஹாம் நேர்காணல் நடத்தினார். அப்போது, H-1B விசா கட்டுப்பாடுகள் உங்கள் நிர்வாகத்துக்கு ஒரு பெரிய முன்னுரிமையாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், திறமையானவர்களை நாம் நமது நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்.
அமெரிக்காவில் ஏராளமான திறமையாளர்கள் இருக்கிறார்களே என்று செய்தியாளர் குறிப்பிட்டதற்கு, "இல்லை. இல்லை. அமெரிக்கர்களிடம் சில திறமைகள் இல்லை. அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இங்கே வேலையில்லாமல் இருப்பவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பதற்காக அவர்களை ஏவுகணைகளை உருவாக்கும் பணிக்கு நியமிக்க முடியாது. சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிவதற்காக ஜார்ஜியாவில் சோதனை நடத்தப்பட்டது. தென் கொரியாவைச் சேர்ந்த மக்கள் அங்கே பேட்டரிகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர். உங்களுக்குத் தெரியும் பேட்டரிகளை உருவாக்குவது மிகவும் சிக்கலான வேலை. மிகவும் ஆபத்தானதும்கூட. அதிக அளவில் வெடிப்புகள் நிகழும்.
அவர்கள் 500 - 600 பேர் இருப்பார்கள். ஆனால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் (ஜார்ஜியா) விரும்புகிறார்கள். இதில், எனக்கு உடன்பாடு இல்லை. உங்களுக்கும் உடன்பாடு இருக்காது என்பது எனக்குத் தெரியும். திறமையானவர்களை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT