Published : 18 Oct 2025 07:09 PM
Last Updated : 18 Oct 2025 07:09 PM
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இன்று (அக்.18) மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAB) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 36-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இது குறித்து பேசிய டாக்கா தீயணைப்பு சேவை செய்தித் தொடர்பாளர் தல்ஹா பின் ஜாசிம், “பிற்பகல் 2:30 மணிக்கு எங்களுக்குத் தகவல் கிடைத்தது, உடனடியாக விமான நிலையத்தில் தீயணைப்பு பணிகளுக்காக வாகனங்களை அனுப்பினோம்” என்று கூறினார்.
விமானப் படையின் தீயணைப்புப் பிரிவுகளும் மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக வங்கதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களின் தரையிறக்கங்களும், புறப்படுதலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அதிகாரிகள் கூறினர்.
டாக்காவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த ஒன்பது விமானங்கள் தீவிபத்து காரணமாக சட்டோகிராம் மற்றும் சில்ஹெட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அவற்றில் எட்டு விமானங்கள் சட்டோகிராமிலும், ஒன்று சில்ஹெட்டிலும் தரையிறங்கியது. சரக்கு முனையத்தில் சேமிக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் வங்கதேச எல்லைக் காவல்படை (BGB) வீரர்கள் தீயணைப்பு படையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT