Published : 12 Oct 2025 01:03 AM
Last Updated : 12 Oct 2025 01:03 AM
காசா: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவம், காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் இருதரப்பினர் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த 9-ம் தேதி இரு தரப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு கடந்த 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அமைதி ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 72 மணி நேரத்தில் விடுக்கப்பட வேண்டும்.
இந்த சூழலில் அமெரிக்கா, எகிப்து, கத்தார், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள், வீரர்கள் காசாவில் முகாமிட்டு போர் நிறுத்தத்தை கண்காணிக்க உள்ளனர். இதன்படி அமெரிக்காவின் சார்பில் 200 வீரர்கள் காசாவுக்கு அனுப்பப்பட உள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் முதல் குழு நேற்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்தது. அங்கிருந்து அவர்கள் காசா எல்லைப் பகுதிக்கு சென்றனர். இந்த வார இறுதிக்குள் 200 அமெரிக்க வீரர்கள் இஸ்ரேலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் காசாவில் முகாமிட்டு போர் நிறுத்தத்தை முழுமையாக கண்காணிக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT