Published : 06 Oct 2025 05:02 PM
Last Updated : 06 Oct 2025 05:02 PM
மருத்துவத்துக்கான நோபல் பரிசு, நோய் எதிர்ப்புத் தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல், ஷிமோன் சகாகுச்சி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று முதல் வெளியாகத் தொடங்கி உள்ளது.
இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.
இவர்கள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலர்கள், ஒழுங்குமுறை டி செல்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளனர். இவை, புதிய ஆராய்ச்சித் துறைக்கு வித்திட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகள், மருத்துவ பரிசோதனைகள் மூலம் மதிப்பீடு செய்யப்படும் சிகிச்சை முறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைகளை வழங்குவதில் இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT