Published : 04 Oct 2025 03:15 PM
Last Updated : 04 Oct 2025 03:15 PM
வாஷிங்டன்: எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிகரிப்பதாக அறிவித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் முடிவை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுகாதார நிறுவனங்கள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கூட்டமைப்பு ஒன்று, ட்ரம்ப் அறிவித்துள்ள எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் தங்கள் மனுவில், "எச்1பி விசாவுக்கான புதிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த செப்டம்பர் 19-ல் வெளியிட்டார். அதில், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2,000 டாலர் என்பதிலிருந்து 5 ஆயிரம் டாலராக கட்டணத்தை அதிகரித்த ட்ரம்ப், தற்போது பன்மடங்கு உயர்த்தி இருப்பது திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எச்1பி விசா திட்டம், வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவதற்கான ஒரு முக்கிய திட்டம். இது அமெரிக்காவின் புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சிறப்புத் துறைகளில் பணியாளர்களை நிரப்ப இது அனுமதிக்கிறது.
அரசின் தற்போதைய முடிவால், மருத்துவமனைகள் மருத்துவ ஊழியர்களையும், தேவாலயங்கள், போதகர்களையும், வகுப்பறைகள் ஆசிரியர்களையும், நாடு முழுவதும் உள்ள தொழில்கள் முக்கிய கண்டுபிடிப்பாளர்களையும் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த உத்தரவை தடுத்து, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான முன் கணிப்புத் தன்மையை மீட்டெடுக்குமாறு கோருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
எச்1பி விசா திட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. அதிக திறமைகளைக் கொண்ட பணியாளர்களை ஈர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த விசா மூலம் அமெரிக்காவில் இருப்போரில் மூன்றில் ஒரு பங்கு பேர், செவிலியர்களாகவும், ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பாதிரியார்களாகவும், போதகர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT