Last Updated : 20 Sep, 2025 11:49 AM

9  

Published : 20 Sep 2025 11:49 AM
Last Updated : 20 Sep 2025 11:49 AM

இந்தியர்களுக்கு பேரிடி: எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இது தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் உத்தரவாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்காக மட்டுமே இந்த விசா பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

அமெரிக்கா வழங்கும் எச்1பி விசாக்களில் 5ல் ஒரு பங்கை இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கைப்பற்றுகின்றன. முன்னதாக எச்1பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சமாக இருந்த நிலையில், அது இப்போது பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பணிக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட எச்1பி விசாக்களில் 71 சதவீதம் அளவுக்கு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, அமெரிக்காவுக்கு பணிக்கு வரும் வெளிநாட்டினர் மிகவும் திறமையானவர்கள் என்பதையும், அமெரிக்க தொழிலாளர்களை மாற்றக்கூடாது என்பதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தொழிலாளர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும், இந்தத் திட்டம் மூலம் அமெரிக்காவின் கருவூலத்திற்கு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி கிடைக்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற எச்1பி விசாக்களில் பணியமர்த்தப்பட்ட இந்திய தொழில்நுட்ப ஊழியர்களை கடுமையாக பாதிக்கும். இந்த விசாக்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம்.

இது குறித்து பேசிய வெள்ளை மாளிகை வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “இந்த கட்டண உயர்வு காரணமாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இனி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்காது. அவர்கள் இனி அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றிலிருந்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிப்பார்கள். அதுபோல, இனி அமெரிக்கர்களுக்கே அவர்கள் பயிற்சியும் அளிப்பார்கள். நமது வேலைகளை பறிக்க வெளிநாடுகளில் இருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுவனங்கள் நிறுத்தவேண்டும். அதுதான் எங்களின் கொள்கை.” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x