Published : 07 Sep 2025 01:41 PM
Last Updated : 07 Sep 2025 01:41 PM
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இந்த முடிவு குறித்து ஜப்பான் நாட்டின் என்.ஹெச்.கே செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.
அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்டிபி கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டுமென அவரது கட்சியின் உறுப்பினர்கள் வற்புறுத்தி வந்தனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கூட்டத்தில் அவருக்கு எதிராக கருத்து எழுந்தது. இருப்பினும் ஜப்பானுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, அதனால் தேசம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பதவி விலக அவர் மறுத்து விட்டார்.
இந்த சூழலில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 141 என இருந்த எல்டிபி கூட்டணியின் எண்ணிக்கையை 122 ஆக குறைந்தது. மேலவையில் மொத்த எண்ணிக்கை 248. பெரும்பான்மையை நிரூபிக்க 3 சீட்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதில் தோல்வி கண்டுள்ளது எல்டிபி கூட்டணி. இந்த நிலையில்தான் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக ஷிகெரு இஷிபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT