Published : 06 Sep 2025 11:56 AM
Last Updated : 06 Sep 2025 11:56 AM
வாஷிங்டன் டிசி: ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட ரோஸ் கார்டனில் நடைபெற்ற இரவு விருந்தில் பேசிய ட்ரம்ப், “ஏழு மாதங்களில் நாங்கள் செய்ததை யாரும் செய்யவில்லை. ஏழு போர்களை நாங்கள் நிறுத்தினோம். ஆனால், எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மிகவும் கடினமானது. ரஷ்ய அதிபர் புதினுடனான உறவு காரணமாக அந்த போரை நிறுத்துவது எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், அது மிகவும் கடினமானதாக முடிந்தது.
ஒரு போர் 31 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது, அது தடுக்க முடியாதது என்று கூறப்பட்டது. நான் அதை சுமார் 2 மணி நேரத்தில் செய்து முடித்தேன். இன்னொன்று 35 ஆண்டுகளாகவும், இன்னொன்று 37 ஆண்டுகளாகவும் நடந்தது. அவற்றையும் முடித்து வைத்தேன்.
நான் சில போர்களை முடித்து வைப்பதற்கு முன்பு, சிலர் அதனை உங்களால் அவற்றைத் தீர்த்து வைக்க முடியாது என்று சொன்னார்கள். நான் அவற்றைத் தீர்த்து வைத்தேன். உக்ரைன் - ரஷ்யா போரும் மிகவும் கடினமாக மாறியுள்ளது, ஆனால் நாங்கள் அதைச் சரிசெய்வோம், நாங்கள் அதைத் தீர்த்து வைப்போம்.” என்று அவர் கூறினார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, ட்ரம்ப் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை இந்த போர் நிறுத்தத்துக்கு குறிப்பிடத்தக்க எந்த அறிகுறியும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT