Published : 01 Sep 2025 01:50 AM
Last Updated : 01 Sep 2025 01:50 AM
புதுடெல்லி: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அதோடு மாலத்தீவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஷாஹினா அலி, பிலிப்பைன்ஸை சேர்ந்த கத்தோலிக்க போதகரும் சமூக ஆர்வலருமான பிளவி வில்லனு வேவா ஆகியோருக்கும் ரமோன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டில் சமூக ஆர்வலர் ஷபீனா ஹுசைன், எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தொண்டு அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் சுமார் 67 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வியை தொடர எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு உதவி செய்துள்ளது.
இந்த அமைப்பில் சுமார் 13,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசின் நிதியுதவியை பெற்று பெண் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT