Published : 31 Aug 2025 02:00 AM
Last Updated : 31 Aug 2025 02:00 AM

சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய உடன்பாடு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோவில் 16 ஜப்பானிய ஆளுநர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் டோக்கியோவில் இருந்து செண்டாய் நகருக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார். அவரோடு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவும் சென்றார்.

ஜப்பான் உதவியுடன் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜப்பான் சார்பில் 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இதன் சோதனை ஓட்டம் ஜப்பானின் செண்டாய் நகரில் நடைபெற்று வருகிறது. செண்டாய் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள புல்லட் ரயில்களை பார்வையிட்டார். மேலும் அங்கு பயிற்சி பெறும் இந்திய ஓட்டுநர்களிடம் அவர் கலந்துரையாடினார்.

பின்னர் செண்டாய் நகரில் உள்ள டோக்கியோ எலக்ட்ரான் நிறுவனத்தின் செமி கண்டக்டர் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இந்த நிறுவனம் சார்பில் உத்தர பிரதேசத்தில் புதிதாக செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்பட உள்ளது.

பின்னர் செண்டாயில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மதிய விருந்து வழங்கினார். அப்போது பிரதமர் இஷிபாவுக்கு சாப்ஸ்டிக்ஸுடன் கூடிய ராமன் கிண்ணங்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். மேலும் இஷிபாவின் மனைவி யோஷிகாவுக்கு பஷ்மினா சால்வையை அவர் பரிசாக அளித்தார்.

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க செண்டாய் நகரில் இருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு விமானத்தில் சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

தற்போது எஸ்சிஓ அமைப்புக்கு சீனா தலைமையேற்று உள்ளது. இதன்படி எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசுகிறார். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களையும் அவர் தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

ஜெலன்ஸ்கி பேச்சு: சீனாவுக்கு பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அவருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுக்கும் என்று ஜெலன் ஸ்கியிடம், பிரதமர் மோடி உறுதியளித்தார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ள நிலையில், ஜெலன்ஸ்கி-மோடி தொலைபேசி பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x