Published : 08 Aug 2025 06:56 AM
Last Updated : 08 Aug 2025 06:56 AM
வாஷிங்டன்: இந்தியாவைப் போல சீனாவுக்கும் 2 மடங்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை எனக் கூறி, மேலும் 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார்.
டொனால்டு ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை எனக் கூறி இந்தியாவுக்கான வரியை இரண்டு மடங்காக உயர்த்தினீர்கள். ஆனால் இந்தியாவை விட ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் சீனா மீதான வரியை உயர்த்தாது ஏன்” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறியதாவது: இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு 8 மணி நேரம்தான் ஆகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் மேலும் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன என்பது உண்மைதான். இந்நிலையில், இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்திருப்பது சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும். இந்தியாவைப் போல சீனாவுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT