Last Updated : 04 Aug, 2025 11:48 PM

10  

Published : 04 Aug 2025 11:48 PM
Last Updated : 04 Aug 2025 11:48 PM

“வரிகளை கணிசமாக உயர்த்துவேன்” - இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். ரஷ்யா உக்ரைனுடன் சமாதான ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் நாடுகளுக்கு 100% வரை கூடுதல் வரிகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி வேகமாக வளர்ந்துள்ளது. 2021-ல் உக்ரைன் போருக்கு முன்பு, ரஷ்யாவிடமிருந்து 3% மட்டுமே எண்ணெய் வாங்கிய இந்தியா, தற்போது 35% முதல் 40% வரை எண்ணெய் வாங்கி வருகிறது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதன்மை ஆலோசகர்களில் ஒருவரான ஸ்டீபன் மில்லர், “இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியுதவி செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று ட்ரம்ப் மிகத் தெளிவாகக் கூறுகிறார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா அடிப்படையில் சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள்.” என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x