Last Updated : 15 Jul, 2025 01:27 PM

3  

Published : 15 Jul 2025 01:27 PM
Last Updated : 15 Jul 2025 01:27 PM

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஜெய்சங்கர் சந்திப்பு

பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று (ஜூலை 15) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சீனா சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்துப் பேசினார்.

அப்போது, இந்தியா - சீனா இடையேயான உறவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க அவர் அழைப்பு விடுத்தார். மேலும், ராணுவ மோதலுக்குப் பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கி இருப்பது இந்தியாவில் பரவலாகப் பாராட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எஸ்சிஓ அமைப்பின் வெற்றிகரமான சீன தலைமையை இந்தியா ஆதரிக்கிறது என்று தெரிவித்த ஜெய்சங்கர், இதில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசன் நகரில் பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்ட பிறகு இருதரப்ப உறவு சீராக மேம்பட்டு வருவதாகக் கூறிய ஜெய்சங்கர், தனது இந்த பயணம் அதை பராமரிக்கும் என நம்புவதாகக் கூறினார்.

சர்வதேச நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ள நிலையில், அண்டை நாடுகளாகவும் பெரிய பொருளாதாரங்களாகவும் உள்ள இந்தியாவும் சீனாவும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துக்களைப் பரிமாரிக்கொள்வது மிகவும் முக்கியம் என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

சீன அதிபருடன் சந்திப்பு: இந்நிலையில், இன்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். தனது இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று காலை பெய்ஜிங்கில் அதிபர் ஜி ஜின்பிங்கை எனது சக எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்களுடன் சந்தித்தேன்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நமது இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து அதிபர் ஜி ஜியிடம் விளக்கினேன். அந்த வகையில் நமது தலைவர்களின் வழிகாட்டுதலை மதிக்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் சீன பயணத்தைத் தொடர்ந்து தற்போது ஜெய்சங்கர் சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x