Last Updated : 14 Jul, 2025 01:31 PM

 

Published : 14 Jul 2025 01:31 PM
Last Updated : 14 Jul 2025 01:31 PM

இந்தியா - சீனா இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம்: எஸ்.ஜெய்சங்கர்

பெய்ஜிங்: இந்தியா - சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நாளை (ஜூலை 15) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு முதல்முறையாக அவர் சீனா சென்றுள்ளார்.

சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்த ஜெய்சங்கர், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா - சீனா இடையேயான உறவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க அவர் அழைப்பு விடுத்தார். மேலும், ராணுவ மோதலுக்குப் பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கி இருப்பது இந்தியாவில் பரவலாகப் பாராட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எஸ்சிஓ அமைப்பின் வெற்றிகரமான சீன தலைமையை இந்தியா ஆதரிக்கிறது என்று தெரிவித்த ஜெய்சங்கர், இதில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசன் நகரில் பிரதமர் மோடியும் அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக்கொண்ட பிறகு இருதரப்ப உறவு சீராக மேம்பட்டு வருவதாகக் கூறிய ஜெய்சங்கர், தனது இந்த பயணம் அதை பராமரிக்கும் என நம்புவதாகக் கூறினார்.

சர்வதேச நிலைமை மிகவும் சிக்கலானதாக உள்ள நிலையில், அண்டை நாடுகளாகவும் பெரிய பொருளாதாரங்களாகவும் உள்ள இந்தியாவும் சீனாவும் வெளிப்படைத் தன்மையுடன் கருத்துக்களைப் பரிமாரிக்கொள்வது மிகவும் முக்கியம் என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

நாளை நடைபெற உள்ள எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் சீன பயணத்தைத் தொடர்ந்து தற்போது ஜெய்சங்கர் சீனா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x