Published : 07 Jul 2025 07:00 AM
Last Updated : 07 Jul 2025 07:00 AM
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது.
இதன் காரணமாக கடந்த 5-ம் தேதி டெக்சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகுதியில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 37 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு கெர் பகுதியில் மாணவிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 750 மாணவிகள் தங்கியிருந்தனர். குவாடலூப் நதி வெள்ளத்தில் சிறப்பு முகாமின் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பெரும்பாலான மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 15 மாணவிகள் சடலங்களாக மீட்கப்பட்டனர். 27 மாணவிகளை காணவில்லை.
சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மீட்புப் படை வீரர்கள் இரவு, பகலாக வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். ஹெலிகாப்டர்கள், ரோந்து படகுகள் மூலம் காணாமல் போன மாணவிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
அடுத்த சில நாட்களுக்கு டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை தொடரும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நதி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
சர்வதேச அளவில் பருவநிலை மாறுபாடு பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அதிக வெப்பம், அதிக குளிர், வரலாறு காணாத கனமழை என பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
பருவநிலை மாறுபாடு காரணமாகவே தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை, பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT