Last Updated : 28 Jun, 2025 11:55 AM

 

Published : 28 Jun 2025 11:55 AM
Last Updated : 28 Jun 2025 11:55 AM

காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதாக தான் நம்புவதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்து வெள்ளை மாளிகையில் அவர் பேசுகையில், “இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட சிலரிடம் நான் இப்போதுதான் பேசினேன். அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார். ஆனால், போர் நிறுத்தம் குறித்து யாரிடம் பேசி வருகிறோம் என்ற தகவலை ட்ரம்ப் வெளியிடவில்லை.

இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. ஆனால், ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவருவோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இருப்பினும் ஆயுதங்களை கைவிட முடியாது என ஹமாஸ் மறுத்து வருகிறது.

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று, 251 பணயக்கைதிகளை பிடித்துச் சென்றதால் காசாவில் போர் தொடங்கியது. 2023 அக்டோபர் 7ம் தேதிக்குப் பிறகு இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் 56,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே அமெரிக்காவின் முன்மொழிவின் பேரில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், காசாவிலும் அமைதி திரும்ப வேண்டுமென பல்வேறு நாடுகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x