Last Updated : 27 Jun, 2025 02:09 PM

1  

Published : 27 Jun 2025 02:09 PM
Last Updated : 27 Jun 2025 02:09 PM

விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், "நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.

சீனா உடனான ஒப்பந்தத்தையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். உண்மையில் ஒருபோதும் நடக்க முடியாத விஷயங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு நாட்டுடனும் உறவு மிகவும் நன்றாக உள்ளது.

நேற்றுதான் சீனாவுடன் கையெழுத்திட்டோம். எங்களிடம் அனைவரும் உள்ளனர். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் மட்டும் அனுப்ப உள்ளோம். அவர்கள் 25%, 35%, 45% வரி செலுத்தப் போகிறார்கள். எங்களுக்கு எளிதான வழி அதுதான். எங்கள் அதிகாரிகள் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அவர்கள் சில நாடுகளுக்கு மட்டும் அவ்வாறு செய்ய விரும்புகிறார்கள். அதிகமான ஒப்பந்தங்களைச் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள்.” என தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கான இந்திய குழு: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழு, வியாழக்கிழமை (ஜூன் 26) அமெரிக்காவுக்கு வந்துள்ள நிலையில், ட்ரம்பின் கருத்துக்கள் வெளியாகி உள்ளன. வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளராக உள்ள ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஜூலை 9 ஆம் தேதிக்கு முன்னர் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x