Last Updated : 23 Jun, 2025 01:55 PM

 

Published : 23 Jun 2025 01:55 PM
Last Updated : 23 Jun 2025 01:55 PM

‘ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 போர் விமானங்களை தாக்கி அழித்தோம்’ - இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ்: ஈரானில் உள்ள 6 ராணுவ விமான நிலையங்களைத் தாக்கியதுடன், 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஈரானில் உள்ள ஆறு விமான நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பதிவில், ‘ ஈரானில் உள்ள மெராபாத், மஷாத் மற்றும் டெஸ்ஃபுல் உட்பட 6 விமான நிலையங்கள், 15 ஈரானிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அழித்தோம். இந்தத் தாக்குதல்கள் மூலம் ஈரானில் உள்ள விமான ஓடுபாதைகள், நிலத்தடி பதுங்கு குழிகள், எரிபொருள் நிரப்பும் விமானம் மற்றும் எஃப்-14, எஃப்-5 மற்றும் ஏஹெச்-1 உள்ளிட்ட விமானங்கள் கடும் சேதமடைந்தன. இந்த விமான நிலையங்களின் இயங்கும் திறனை எங்கள் விமானப்படை சீர்குலைத்தது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் அறிக்கையில், ‘ இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை. இஸ்ரேலின் ராணுவ புலனாய்வு சேவையின் உளவுத்துறை வழிகாட்டுதல்களின்படி, ஈரானில் உள்ள கெர்மன்ஷா பகுதியில், இஸ்ரேல் நாட்டின் நகரங்களை தரையிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணைகள் மூலம் தாக்கும் இலக்குகளை கொண்ட பல ஏவுதளங்கள் மற்றும் சேமிப்பு தளங்கள் அழிக்கப்பட்டன.

ஈரானின் ராணுவத் திறன்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தீவிரப்படுத்துகிறது. மேலும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற முக்கிய இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் இத்தகைய தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x