Published : 23 Jun 2025 01:30 PM
Last Updated : 23 Jun 2025 01:30 PM
தெஹ்ரான்: போரை நீங்கள் தொடங்கலாம், ஆனால் நாங்கள்தான் அதனை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று அமெரிக்காவுக்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் ஆயுதப் படைகளின் மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஈரான் ஆயுதப் படைகளுக்கான சட்டப்பூர்வ இலக்குகளை விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா தனது செயல்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்பார்க்க வேண்டும்.
ட்ரம்ப், நீங்கள் ஒரு சூதாட்டக்காரர். நீங்கள் இந்தப் போரைத் தொடங்கலாம், ஆனால் நாங்கள்தான் அதை முடிவுக்குக் கொண்டுவருவோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மேற்கு ஈரானில் உள்ள ராணுவ தளங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேற்கு ஈரானின் கெர்மான்ஷாவில் உள்ள ராணுவ தளங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் இன்று (திங்களன்று) தெரிவித்துள்ளது.
"கெர்மன்ஷா, ஹமேடன் மற்றும் தெஹ்ரான் பகுதிகளில் உள்ள தளங்களில் 30க்கும் மேற்பட்ட வெடிமருந்துகளைப் பயன்படுத்தி உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் தோராயமாக 20 இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தின.
ஈரானின் ஏவுகணை சேமிப்பு மற்றும் ஏவுதள உள்கட்டமைப்பு, வான்வழி உளவுத்துறைக்கு பயன்படுத்தப்படும் ரேடார் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள், தெஹ்ரானுக்கு அருகில் ஒரு தரையிலிருந்து வான் ஏவுகணை ஏவுதளம் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல்கள், ஈரானின் ராணுவத் திறன்களைக் குறைத்து இஸ்ரேலிய பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும்" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மற்றொரு புறம், ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதனால் மத்திய இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT