Published : 22 Jun 2025 09:56 AM
Last Updated : 22 Jun 2025 09:56 AM

ஈரான் தொடர் தாக்குதல்: வெறிச்சோடிய இஸ்ரேல் நகரங்கள் - நிலவரம் என்ன?

டெல் அவிவ்: ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் கொத்து குண்டுகளையும் ஈரான் ராணுவம் வீசி வருகிறது.

கிளஸ்டர் குண்டு எனப்படும் ஒரு கொத்து குண்டில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட குண்டுகள் இருக்கும். இவை சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை வெடித்துச் சிதறி பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. சில குண்டுகள் பூமியில் புதைந்துவிடும். அவை சில மாதங்கள், சில ஆண்டுகள் கழித்துகூட வெடித்துச் சிதறும். கொத்து குண்டில் விஷ வாயுக்களை நிரப்பினால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். இதனால் இஸ்ரேல் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழையும்போது அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நகரங்களை சேர்ந்த இஸ்ரேல் மக்களின் செல்போன்களுக்கு அபாய எச்சரிக்கை தகவலும் அனுப்பப்படுகிறது. அபாய ஒலி, எச்சரிக்கை தகவலை பார்த்தவுடன் இஸ்ரேல் மக்கள் வீடுகள், பொது இடங்களில் உள்ள பதுங்கு அறைகளில் தஞ்சமடைந்து விடுகின்றனர். இதனால் இஸ்ரேலில் உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறைந்தது ‘அயர்ன் டோம்’ திறன்: ஈரான் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் டெல் அவிவ் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரவாக இஸ்ரேல் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செயல்படவில்லை. இஸ்ரேல், ஈரான் இடையே இன்று 9-வது நாளாக போர் நீடித்தது வரும் நிலையில், இஸ்ரேல் நகர மக்களிடம் தொடர்ந்து அச்சம் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் சார்பில் ‘அயர்ன் டோம்’ என்ற வான் பாதுகாப்பு கவசம் நிறுவப்பட்டு உள்ளது. சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள எதிரிகளின் ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன்களை, ‘அயர்ன் டோம்’ ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழித்துவிடும்.
அயர்ன் டோமின் செயல்திறன் 90 சதவீதம் துல்லியமானது என்று இஸ்ரேல் ராணுவம் கூறிவந்தது. ஆனால் அதன் செயல்திறன் 60 முதல் 65 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களில் ஈரான் ராணுவம், இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியிருக்கிறது. இதில் 60 சதவீத ஏவுகணைகளை மட்டுமே ‘அயர்ன் டோம்’ இடைமறித்து அழித்திருக்கிறது. 40 சதவீத ஏவுகணைகள் இஸ்ரேல் நகரங்கள் மீது விழுந்துள்ளன. இதன் காரணமாகவே இஸ்ரேல் நகரங்களில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.

முன்னதாக, ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதனிடையே, ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பும் ஈரானின் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. | வாசிக்க > “இனியும் உடன்படவில்லை எனில்...” - ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை விவரித்த ட்ரம்ப் எச்சரிக்கை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x