Last Updated : 21 Jun, 2025 05:29 PM

 

Published : 21 Jun 2025 05:29 PM
Last Updated : 21 Jun 2025 05:29 PM

இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது: துருக்கி குற்றச்சாட்டு

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன்

இஸ்தான்புல்: ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், “இஸ்ரேல் இப்போது நமது அண்டை நாடான ஈரானை தாக்குவதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியை முழுமையான பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் தரப்பில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இஸ்ரேலின் பக்கம்தான் பிரச்சினை தெளிவாக உள்ளது.

எனவே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வரம்பற்ற ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும் வன்முறைச் சுழலாக தற்போதைய நிலைமை மோசமடைவதை நாம் தடுக்க வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார்.

ஃபிடானுக்குப் பிறகு பேசிய துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், “மேற்கத்திய தலைவர்கள் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறார்கள். மத்திய கிழக்கின் எல்லைகளை மீண்டும் ரத்தத்தில் வரைய துருக்கி அனுமதிக்காது.

பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, சிரியா, லெபனான் மற்றும் ஈரானிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நாம் அதிக ஒற்றுமையைக் காட்டுவது மிக முக்கியம்” என்று அவர் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 57 உறுப்பு நாடுகளிடம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x