Last Updated : 19 Jun, 2025 05:25 PM

 

Published : 19 Jun 2025 05:25 PM
Last Updated : 19 Jun 2025 05:25 PM

‘ஈரான் உச்ச தலைவர் கமேனி உயிருடன் இருக்கவே கூடாது’ - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சீற்றம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்.

டெல் அவிவ்: “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சொரோகா மருத்துவமனை தாக்குதலால் கடும் கோபமடைந்துள்ள இஸ்ரேல் எச்சரிக்கைகளை பதிவு செய்து வருகிறது. ஏற்கெனவே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஈரான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியிருந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிருடன் இருக்கவே கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

காட்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “கமேனி ஒரு நவீன கால ஹிட்லர். அவர் எப்போதுமே தனது ஏஜென்ட்டுகள் மூலம் இஸ்ரேலை அழிக்க முயறிசிக்கிறார். எங்களைத் தாக்க நினைக்கும் இந்த நபர் உயிருடன் இருக்கவே கூடாது. இஸ்ரேல் ராணுவத்துக்கு நாங்கள் இலக்குகளை வகுத்துக் கொடுத்துவிட்டோம். இந்த நபரை அழிப்பது என்பது எங்களுடைய இந்தப் போரின் இலக்கு. இஸ்ரேலை அழிப்போம் என்று கமேனி முன்பு பேசியது எல்லாம் இப்போது செயல்வடிவம் பெற்றுவருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த சீற்றம்? - இஸ்ரேல் - ஈரான இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்னர். தெற்கு இஸ்ரேலில் சுமார் 10 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய இந்த மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளானது இஸ்ரேல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி அடுத்து இஸ்ரேலின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற அச்சம் மத்தியஸ்த நாடுகளுக்குப் படரத் தொடங்கியுள்ளது.

அதேவேளையில், ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ வெளியிட்டுள்ள செய்தியில், “இஸ்ரேலில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எங்கள் இலக்கு இஸ்ரேல் ராணுவத் தளம் மற்றும் உளவுப் பிரிவு தளம் மட்டுமே. அவை கவ்-யாம் தொழில்நுட்பப் பூங்காவில் உள்ளன. அந்தப் பூங்காவுக்கு அருகே தான் சொரோகா மருத்துவமனை உள்ளது. நாங்கள் நடத்திய தாக்குதலின் அதிர்வலைகளால் ஏற்பட்ட பாதிப்புதான் மருத்துவமனையில் உணரப்பட்டதே தவிர, எங்களின் இலக்கு மருத்துவமனை அல்ல” என்று தெரிவித்துள்ளது.

நினைவுகூரத்தக்க ட்ரம்ப்பின் பதிவு: முன்னதாக கடந்த செவ்வாய்க் கிழமை செவ்வாய்க் கிழமை டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால், பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x