Published : 19 Jun 2025 03:20 PM
Last Updated : 19 Jun 2025 03:20 PM
டெல் அவிவ்: ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்துவரும் நிலையில், இன்று (ஜூன் 19) இஸ்ரேலின் சொரோகா மருத்துவமனை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 47 பேர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
மருத்துவமனையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள், 47 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தத் தாக்குதல் இஸ்ரேல் அரசையும், மக்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சொரோகா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனையில் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். எங்கள் மக்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் காவல் துறை, பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், “சொரோகா மருத்துவமனை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அங்கே செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளது.
நெதன்யாகு எச்சரிக்கை: இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “ஈரானிய சர்வாதிகாரிகள் இன்று காலை நாட்டின் மையப் பகுதியில் உள்ள சொரோகா மருத்துவமனையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்காக ஈரானிய சர்வாதிகாரிகள் கடும் விலையை கொடுப்பார்கள்” என்று எச்சரித்துள்ளார். சொரோகா மருத்துவமனையை தவிர டெல் அவிவில் உள்ள இரண்டு கட்டிடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் பங்குச் சந்தை கட்டிடமும், சில குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.
முன்னதாக, ஈரானின் அராக் அணு உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை உறுதி செய்த ஈரான், ஆனால், தாக்குதலுக்கு முன்னரே அணு உலையில் இருந்து அனைவருமே வெளியேற்றப்பட்டுவிட்டனர் என தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்து வருவது மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை கூட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT