Published : 19 Jun 2025 01:04 AM
Last Updated : 19 Jun 2025 01:04 AM

அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும்: சரணடைய மறுத்து அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை

டெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் அந்நாட்டு மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த 6 நாட்களாக தீவிர வான்வழி போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானின் உச்ச தலைவர் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் இப்போதைக்கு அவரை கொலை செய்யப் போவதில்லை. அதேநேரம், பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குவதை ஏற்க முடியாது. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் போர் தொடங்கிய பிறகு ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி முதன் முறையாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

திணிக்கப்பட்ட போருக்கு எதிராக ஈரான் உறுதியாக நிற்கும். அதேபோல திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும். மேலும் ஈரான் யாரிடமும் ஒருபோதும் சரணடையாது.

ஈரான் வரலாற்றைப் பற்றி அறிந்த புத்திசாலிகள் ஈரானுடன் ஒருபோதும் அச்சுறுத்தும் மொழியில் பேசமாட்டார்கள். ஏனெனில் ஈரான் ஒருபோதும் சரணடையாது. இந்தப் போரில் அமெரிக்கா தலையிட்டால் அதன் விளைவு ஈடு செய்ய முடியாததாக இருக்கும்.

ஜியோனிஸ்ட் (இஸ்ரேல்) அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டது. அதற்காக உரிய தண்டனையை கொடுப்போம். நமது மக்கள் தங்கள் தியாகிகளின் ரத்தத்தை விட்டுவிட மாட்டார்கள். தங்கள் வான்வெளியை மீறுவதை நிறுத்த மாட்டார்கள்.

நமது ராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாக்க தயாராக உள்ளனர். ஜியோனிஸ, தீவிரவாத ஆட்சியாளர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கருணை காட்டக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x