Published : 14 Jun 2025 12:27 AM
Last Updated : 14 Jun 2025 12:27 AM

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. சில தலைவர்கள் (ராணுவ தளபதிகள்) மிகப்பெரிய வீரர்களை போன்று பேசினர். அவர்கள் இன்று உயிரோடு இல்லை.

ஈரான் ராஜ்ஜியம் நிலைத்திருக்க வேண்டும். இனிமேல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது. இனிமேல் அழிவுகள் ஏற்படக்கூடாது என்று கருதினால் அணு சக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா எந்த வகையிலும் உதவி செய்யவில்லை. எனினும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம். இதுதொடர்பாக அமெரிக்காவின் மூத்த தளபதிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறேன்.

60 நாட்களுக்குள் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நாடு கையெழுத்திடவில்லை. இன்று 61-வது நாள். ஈரானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொண்டால் நல்லது. இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் வட்டாரங்கள் கூறும்போது, “அணு சக்தி தொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையே ஞாயிற்றுக்கிழமை 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் ஈரான் பங்கேற்காது" என்று திட்டவட்டமாக தெரிவித்தன.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறும்போது, “இஸ்ரேலும் ஈரானும் பொறுமை, நிதானத்துடன் செயல்பட வேண்டும். மத்திய கிழக்கின் அமைதியை காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறும்போது, “ஈரான் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்ரேல், ஈரான் இடையே பதற்றத்தை தணிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். சமரச தூதராக செயல்பட சீனா தயாராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x