Published : 14 Jun 2025 12:02 AM
Last Updated : 14 Jun 2025 12:02 AM
தெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நேற்று சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், ஈரானின் 4 அணுசக்தி தளங்கள், 2 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்ததாக்குதலில் ஈரானின் 6 அணுசக்தி விஞ்ஞானிகள், 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர்.
அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான யுரேனியம்,ஈரானிடம் சுமார் 275 கிலோ வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த யுரேனியம் தற்போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 90 சதவீதம் அளவுக்கு இதை செறிவூட்டினால் அணுகுண்டு தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதுவரை 5 கட்ட பேச்சு நடத்தியும், எந்தஉடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் தாக்குதல் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட போர்விமானங்கள், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் ஈரான் முழுவதும்குண்டுகள் வீசப்பட்டன. ஈரானின் இஸ்ஃபகான் மாகாணம் நடான்ஸ் நகரில் அந்த நாட்டின் மிகப்பெரிய அணுசக்தி தளம்
உள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 80 மீட்டர் ஆழத்தில் செயல்படும் இந்த தளத்தில் 9 அணுகுண்டுகளை தயாரிக்க இறுதிகட்ட பணிகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தளத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் பூமியை துளைத்து தாக்கும் அதிநவீன குண்டுகளை வீசின. இதில், பூமிக்கு அடியில் செயல்பட்ட அணுசக்தி ஆலையின் 26 தளங்களும் கடுமையாக சேதமடைந்தன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி ஆராய்ச்சி மையம், இஸ்ஃபகான் நகரில் உள்ள அணுசக்தி தொழில்நுட்ப மையம், மர்காஸி மாகாணம் அராக் நகரில் உள்ள கனநீர் அணு உலை மையம் ஆகியவையும் இஸ்ரேலின் தாக்குதலில் தகர்த்து அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில், ஈரானின் மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் அப்துல் ஹமீது, அகமதுரசா, சையது அமீர்உசைன், மோட்லாபிசாடே, முகமது மெஹதி, அப்பாஸி ஆகிய 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது, ஈரானின் அணு ஆயுத திட்டத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண தலைநகர் தப்ரீஸில் உள்ள ராணுவ முகாமில் அதிநவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஈரான் ராணுவத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமும் அங்கு உள்ளது. இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டு மழையில் இவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இராக் எல்லையை ஒட்டி கெர்மான்ஷா நகரில் உள்ள ராணுவ முகாம், ஆயுத உற்பத்தி ஆலைகளும் பெரிதும் சேதமடைந்தன.
2-வது தாக்குதல்: தலைநகர் தெஹ்ரானில் உள்ள ராணுவ குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ட்ரோன்கள் துல்லிய தாக்குதல் நடத்தியதில், ஈரான் ராணுவ தளபதி முகமது பகேரி, இஸ்லாமிக் புரட்சி காவல் படையின் தளபதி உசைன் சலாமி, கதம் அல் அன்பியா என்ற ஈரான் போர் கட்டளை தலைமையகத்தின் தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட மூத்தராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஈரானின் மேற்கு தெஹ்ரான், கராஜ் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 2-வது தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.
இஸ்ரேலுக்கு பதிலடி; கொமேனி எச்சரிக்கை: இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் நேற்று 100 ட்ரோன்களை அனுப்பியது. அவை அனைத்தையும் இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, ‘‘ஈரான் அணுகுண்டு தயாரித்தால், இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும். இதை தடுக்கவே அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. ‘ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’’ என்றார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வலைதள பதிவில், ‘தற்போதைய சூழல் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விளக்கினார். அப்போது இந்தியாவின் கவலையை எடுத்துரைத்தேன். மத்திய கிழக்கில் அமைதி, ஸ்திரத்தன்மையை விரைந்து ஏற்படுத்த வலியுறுத்தினேன்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ‘ஈரான் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு மிக கடுமையான, வேதனை அளிக்கும் பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஈரான் மத தலைவர் அலி கொமேனி எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT