Published : 09 Jun 2025 08:09 AM
Last Updated : 09 Jun 2025 08:09 AM

கரோனாவைவிட மோசமான கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீனா: மூத்த அரசியல் விமர்சகர் எச்சரிக்கை

வாஷிங்டன்: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. உடனடியாக சீனாவுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள வேண்டும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த பெண் ஆய்வாளர் யுன்கிங் ஜியான் (33) பணியாற்றி வருகிறார். அவரும் அவரது காதலர் ஜுன்யாங் லியூவும் சீனாவில் இருந்து ஒரு வகை பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சீன வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் கூறியதாவது: கரோனா வைரஸைவிட மோசமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு சீனா கடத்தியிருக்கிறது. இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, நெல் உள்ளிட்ட தானியங்களை அழிக்கும் தன்மை கொண்டது. அதோடு கால்நடைகள், மனிதர்களுக்கும் பூஞ்சை பரவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பூஞ்சையால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும்.

கைது செய்யப்பட்ட யுன்கிங் ஜியான், ஜுன்யாங் லியூ ஆகியோர் சீனாவில் ஆட்சி நடத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் மிக நெருங்கிய தொடர்பு உடையவர்கள். சீன அரசின் சதித் திட்டத்தின்படி இருவரும் அமெரிக்காவுக்குள் கொடிய பூஞ்சையை கடத்தி உள்ளனர்.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரப்பப்பட்டது. அடுத்த கட்டமாக பூஞ்சை தாக்குதலை நடத்த சீனா திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவை குறிவைத்து அந்த நாடு செயல்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் எப்போதும் போர் குறித்தே பேசுகிறார். சீன மக்கள் போருக்கு தயார் நிலையில் இருக்குமாறு அவர் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்.

இதுகுறித்து அமெரிக்க அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த 2020-ம் ஆண்டில் சீனாவில் இருந்து அமெரிக்காவின் 50 மாகாணங்களில் விதைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த விதைகள் நச்சுதன்மை கொண்டவை. அமெரிக்காவின் வேளாண்மையை அழிக்க சீனா ரகசியாக சதி செய்கிறது. எனவே சீனாவுடனான உறவை அமெரிக்க அரசு உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரசியல் விமர்சகர் கார்டன் ஜி சாங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த 2023-ம் ஆண்டில் கேனடிடா ஆரிஸ் என்ற பூஞ்சை மனிதர்களிடம் பரவுவது கண்டறியப்பட்டது. இந்த பூஞ்சை தற்போது அமெரிக்காவில் அதிதீவிரமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் 38 மாகாணங்களில் கேனடிடா ஆரிஸ் பூஞ்சை பாதிப்பு காணப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறும்போது, “அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பூஞ்சையால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் பூஞ்சை பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நவேடா, புளோரிடா மாகாணங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. வாஷிங்டன் உள்ளிட்ட 12 மாகாணங்கள் மட்டுமே பூஞ்சை பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன. அந்த மாகாணங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தன.

கேனடிடா ஆரிஸ் பூஞ்சை பரவல் பின்னணியில் சீனா இருக்கக்கூடும் என்று ஒருதரப்பினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x