Last Updated : 08 Jun, 2025 12:42 PM

 

Published : 08 Jun 2025 12:42 PM
Last Updated : 08 Jun 2025 12:42 PM

''எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது'' - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

டொனல்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க்

வாஷிங்டன்: உலகின் ‘நம்பர் 1’ செல்வந்தரான எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் ட்ரம்ப்பின் முன்னாள் நண்பரான மஸ்க், இப்போது அவரது பிரதான டார்கெட்டாக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் தொலைபேசி வழியாக அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். நான் மற்ற பணிகளை செய்வதில் மிகவும் பிஸியாக உள்ளேன்.

அதிபர் தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை அதிபராக ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை.

2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் இப்போது மஸ்க்கை குறிவைத்துள்ளதாக அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது. அதை சுட்டும் வகையில் அவரது அண்மைய பேச்சும் இருந்துள்ளது. அரசின் செலவினங்களை குறைக்க மஸ்க்கின் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தால் போதும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், தற்போது வெளிப்படையாக ஜனநாயக கட்சியினருக்கு உதவினால் பின்விளைவுகளை எதிர்கொள்வார் என கூறியுள்ளார்.

துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்: “மஸ்க் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர். நிச்சயம் அவர் அரசுடன் இணைந்து பயணிப்பார் என கருதுகிறேன். ஆனால், இப்போது அது நடக்காது. அதிபர் ட்ரம்ப் சிறப்பாக தனது பணிகளை செய்து வருகிறார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் அதிபர் எந்த தவறையும் செய்யவில்லை. அதிபர் அண்மையில் அறிமுகம் செய்த மசோதா சிறந்த ஒன்று” என அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கூறியுள்ளார்.

பின்னணி என்ன? - அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதிபர் ட்ரம்ப்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார்.

இதற்கு சமூக ஊடகத்தில் பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், “மின்சார வாகனங்களுக்கான மானியம் பட்ஜெட்டில் ரத்து செய்வதால், எலான் மஸ்க் கோபம் அடைந்துள்ளார். பட்ஜெட்டில் பல லட்சம் பணத்தை சேமிப்பதற்கான ஒரே வழி எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்களையும், அமெரிக்க அரசு செய்துள்ள ஒப்பந்தங்களையும் நிறுத்துவதுதான்.” என எலான் மஸ்க்குக்கு மிரட்டல் விடுத்தார். இந்த வார்த்தை மோதல் நீண்டு கொண்டே செல்கிறது.

வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு, அதிபர் ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆண்டு லாபம் 1.2 பில்லியன் டாலர் அளவுக்கு குறையலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x