Published : 06 Jun 2025 08:50 AM
Last Updated : 06 Jun 2025 08:50 AM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
“எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால், இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ, இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இது நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
“எல்லோரையும் விட இந்த புதிய மசோதா குறித்து மஸ்க் முழுவதுமாக அறிவார். அதன் உள் விவரங்களையும் அவர் நன்கு தெரியும். இந்தச் சூழலில் திடீரென்று இப்போது அவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. மஸ்க் எனக்கு எதிராக இருப்பது குறித்து நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவர் இதை முன்பே செய்திருக்க வேண்டும்” என ட்ரம்ப் கூறினார். உடனடியாக, நிகழ்நேரத்தில் எக்ஸ் வலைதளத்தில் ட்வீட் மூலம் மஸ்க் பதிலடி கொடுத்தார்.
அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். தொடர்ந்து அமெரிக்க அரசு செயல்திறன் துறையின் (டிஓஜிஇ) சிறப்பு ஊழியர் பொறுப்பில் இருந்து அண்மையில் அவர் விலகினார். “நான் மட்டும் இல்லையென்றால் 2024 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றிருப்பார். அவர் நன்றி இல்லாதவர். ட்ரம்ப் பொய் சொல்கிறார். அந்த மசோதா எனது பார்வைக்கு கிடைக்கவில்லை. இது இந்த ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.
அதிபர் ட்ரம்ப் எனது நிறுவனங்களின் அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து பேசினார். அந்த வகையில் ஸ்பேஸ்-எக்ஸின் டிராகன் விண்கலன் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துகிறது” என மஸ்க் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
இதோடு அதிபர் ட்ரம்ப்பை நீக்கிவிட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸை அதிபராக நியமிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் தெரிவித்திருந்தார். ‘ஆம்’ என அதற்கு பதில் கொடுத்துள்ளார் மஸ்க்.
மேலும், அமெரிக்காவில் புதிய கட்சியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு ஒன்றையும் மஸ்க் முன்னெடுத்துள்ளார். எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியிடாதது குறித்தும் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ட்ரம்ப் சம்மந்தப்பட்டு இருப்பது தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன? - அமெரிக்காவின் பட்ஜெட் திட்டம் ஏமாற்றம் அளித்ததால், அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த வாரம் வெளியேறினார். அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்றதும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல்திறன் துறை (டிஓஜிஇ) என்று உருவாக்கப்பட்டது.
ஆண்டுதோறும் எலான் மஸ்க் 130 நாட்கள் சிறப்பு அரசு ஊழியராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இத்துறை அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது உட்பட பல ஆலோசனைகளை அமெரிக்க அரசுக்கு வழங்கி வந்தது. இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இது எலான் மஸ்க் தலைமையிலான அரசு செயல்திறன் துறை தெரிவித்த பரிந்துரைகளுக்கு மாறாக இருந்துள்ளது. மக்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளுடன், ராணுவ பட்ஜெட் செலவினங்களும் அதிகமாக இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பல வரிச்சலுகைகளை அளித்தது. அதேபோல் தற்போதும் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 1,300 டாலர் கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பயனடைவர். பட்ஜெட் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் ட்ரம்பின் மிகப் பெரிய மற்றும் அருமையான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தொழிலதிபர் எலான் மஸ்க் கூறினார்.
‘‘சிறப்பு அரசு ஊழியராக எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வருகிறது. வீண் செலவினங்களை குறைக்க வாய்ப்பளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு நன்றி. அமெரிக்க அரசின் மிகப் பெரிய பட்ஜெட், நிதி பற்றாக்குறையை அதிகரித்துள்ளது. அரசு செயல்திறன் துறையின் பணிகளை குறைத்து மதிப்பிட்டுள்ளது. இந்த பட்ஜெட் பெரியதாக இருக்கலாம் அல்லது அருமையானதாக இருக்கலாம். ஆனால் இரண்டும் சேர்ந்ததாக இருக்குமா என தெரியவில்லை’’ என மஸ்க் அப்போது தெரிவித்தார். அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை அவர் மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT