Published : 02 Jun 2025 07:23 AM
Last Updated : 02 Jun 2025 07:23 AM

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

கீவ்: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன. இதுகுறித்து உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

ரஷ்ய ராணுவம் நாள்தோறும் போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் 4 விமானப்படை தளங்கள் மீது ட்ரோன்கள் மூலம் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினோம். இதில் பெலயா விமானப்படை தளம் உக்கரைனில் இருந்து 4,700 கி.மீ. தொலைவிலும், ஒலன்யா தளம் 2,000 கி.மீ. தொலைவிலும் உள்ளன.

எங்களது தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக ரஷ்யாவுக்கு ரூ.17,000 கோடி (2 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ரஷ்யாவின் எல்லைப் பகுதிக்குள் சரக்கு லாரிகளில் ட்ரோன்களை கடத்திச் சென்றோம். அந்த லாரிகளில் இருந்து எப்பிவி ரக ட்ரோன்கள் பறந்து ரஷ்ய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எங்களுடைய புதிய ட்ரோன்கள் 3,000 கி.மீ. தொலைவு வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. இவ்வாறு உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x