Published : 29 May 2025 02:34 PM
Last Updated : 29 May 2025 02:34 PM
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா கசூரி பாகிஸ்தானில் நடந்த ஒரு பொதுப் பேரணியில் காணப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவளிப்பதற்கான மற்றொரு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். பஹல்காம் தாக்குதலின் மூளையாக சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா கசூரி இருப்பதாக கூறப்பட்டது. அதாவது, காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை சைஃபுல்லா காலித் முன்னெடுத்து நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தளபதி சைஃபுல்லா கசூரி, புதன்கிழமை பொதுவில் மீண்டும் தென்பட்டுள்ளார். இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கிய பிறகு அவர் தலைமறைவானதும் கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் (PMML) என்ற கட்சி ஏற்பாடு செய்த பேரணியில், பாகிஸ்தான் அரசியல்வாதிகளுடன் சைஃபுல்லா கசூரி இருந்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் பேரணியில், கலந்து கொண்டவர்களில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் மகனும் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான தல்ஹா சயீத் இருந்தார். அந்தப் பேரணியில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப் பட்டன.
இந்நிலையில், சைஃபுல்லா கசூரி பேரணியில் பேசும் போது “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டதாக என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்போது என் பெயர் உலகம் முழுவதும் பிரபலமாகியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் 2024 பொதுத் தேர்தலில் லாகூரில் உள்ள NA-122 தொகுதியில் இருந்து போட்டியிட்டு தோல்வியடைந்த சயீத், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு, ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் கட்சியின் செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள சித்தாந்த சக்தியாக இன்னும் பார்க்கப்படுகிறார்.
அதோடு, சைஃபுல்லா கசூரி பாகிஸ்தானில் நடந்த ஒரு பொதுப் பேரணியில் காணப்பட்டது பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவளிப்பதற்கான மற்றொரு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT