Last Updated : 27 May, 2025 11:13 AM

 

Published : 27 May 2025 11:13 AM
Last Updated : 27 May 2025 11:13 AM

‘அனெபல்’ பொம்மை காணாமல் போகவில்லை: வதந்திகளுக்கு மியூசியம் முற்றுப்புள்ளி

’Annabelle comes Home’ படத்தில் அனபெல் பொம்மை

ஹாலிவுட் ஹாரர் படங்களின் மிக முக்கிய திகில் படமான அனபெல் படங்களில் இடம்பெற்ற அனபெல் பொம்மையைக் காணவில்லை என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அனபெல் (Annabelle) திகில் படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அதில் பேயாக வரும் அமானுஷ்யங்கள் நிறைந்த Annabelle பொம்மை தான் இந்த வரிசைப் படங்களின் முக்கிய கதாபாத்திரம். உலகம் முழுவதும் குக்கிராமங்கள் வரையிலும் பிரபலமாகிவிட்ட இந்த பொம்மை, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பொம்மை மாயமாகிவிட்டதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி அது படுவைரலானது. கூடவே, அனபெல் பொமை காணாமல் போனதை ஒட்டி பல்வேறு கதைகளும் இணையதளங்களில் கிளம்பின. இந்நிலையில், அவை அனைத்துமே வெறும் வதந்தி என்று கூறியுள்ளார் அருங்காட்சியகத்தின் அதிகாரி.

நடந்தது என்ன? வழக்கமாக நியூ இங்கிலாந்து மனநல ஆராய்ச்சி சமூகத்தினால் (New England Society for Psychic Research) உருவாக்கப்பட்ட வாரன்ஸ் அக்கல்ட் மியூசியத்தில் வைக்கப்பட்டிருக்கும் அனபெல் பொம்மை, மே மாத தொடக்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அவ்வாறாக லூசியானா கொண்டு செல்லப்பட்ட அனபெல் பொம்மை மாயமானதாக தகவல் பரவியது. அனபெல் பொம்மை காணாமல் போனதாக தகவல் வெளியான அதே நேரத்தில் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு வெகு அருகிலிருந்த ரிசார்ட் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தைப் பயன்படுத்தி அனபெல் பொம்மையை யாரேனும் கடத்திச் சென்றிருக்க வேண்டும், இல்லாவிட்டால் அனபெல் பொம்மையின் அமானுஷ்ய சக்தியால் தீ விபத்து ஏற்பட்டு, அதைப் பயன்படுத்தி அதுவாகவே மாயமாகியிருக்க வேண்டும் என்று தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் அனபெல் பொம்மை அங்கிருக்கிறது, இங்கிருக்கிறது என்று அன்றாடம் வதந்திகள் பரவின. சிகாகோவில் தான் அனபெல் பொம்மை இருக்கிறது. மக்கள் உஷாராக இருக்கவும் என்று சில தகவல்களும் பரவின.

இந்நிலையில் நியூ இங்கிலாந்து மனநல ஆராய்ச்சி சமூகத்தின் தலைமை விசாரணை அதிகாரி டான் ரிவேரா வெளியிட்ட டிக்டாக் வீடியோவில், “அனபெல் பொம்மை மாயமானது என்ற தகவல் உண்மையல்ல. இதோ நான் மியூசியத்தில் தான் இருக்கிறேன், வாருங்கள் உள்ளே செல்வோம். இதோ நீங்களே பாருங்கள். இந்த மரப்பெட்டிக்குள் அனபெல் பொம்மை பத்திரமாக இருக்கிறது. பொம்மை சிகாகோவில் இருக்கிறது என்பதெல்லாம் புரளி. இனி, 2025 அக்டோபரில் இல்லினாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் தான் அனபெல் பொம்மை பங்கேற்கும்.” என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதேபோல் NESPR அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும், “அனபெல் பொம்மையை யாரும் திருடவில்லை. வாரன் அக்கல்ட் மியூசியத்தில் பொம்மை பத்திரமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x