Published : 22 May 2025 05:27 PM
Last Updated : 22 May 2025 05:27 PM
இஸ்லாமாபாத்: இருதரப்பு உறவுகளை இயல்பாக்குவதற்காக இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க வேண்டும் என்று 49% பாகிஸ்தானியர்கள் தெரிவித்திருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இம்மாதம் 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. 9 பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தை அடுத்து இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்பட்டு, 4 நாட்களுக்குப் பிறகு அது முடிவுக்கு வந்தது. ராணுவ மோதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், மே 12 முதல் 18 வரை பாகிஸ்தான் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நூறு பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது. கேலப் பாகிஸ்தான் (Gallup Pakistan) நடத்திய இந்த சர்வேயில், இந்தியா - பாகிஸ்தான் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன.
அது குறித்து தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, போர் நிறுத்தத்திற்குப் பிறகு உறவுகளை இயல்பாக்குவதற்கு இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க 49% சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், 35% பாகிஸ்தானியர்கள் இதனை எதிர்க்கின்றனர். நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் முதலில் தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
இந்தியாவுடனான உறவுகளை சீராக்க இந்தியா உடனான விளையாட்டுப் போட்டிகளை அதிகரிக்க வேண்டும் என்று 48% பாகிஸ்தானியர்கள் தெரிவித்துள்ளனர். 35% பேர் இதனை எதிர்த்துள்ளனர்.
கல்வித் துறையில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்று 44% பாகிஸ்தானியர்கள் விருப்பம் தெரிவித்துள்ள அதே நேரத்தில் 36% பேர் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளனர். கலாச்சார உறவுகளை அதிகரிப்பதற்கு நாற்பது சதவீதம் பேர் ஆதரவும், 35% பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
“நீங்கள் 1947 இல் இருந்திருந்தால், இந்தியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக இருந்திருப்பீர்களா” என்ற கேள்விக்கு, 86% பேர் இந்தியாவிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்று தெரிவித்துள்ளனர். மூன்று சதவீதம் பேர் அதை எதிர்த்திருப்போம் என்று கூறியுள்ளனர். 7 சதவீதம் பேர் இதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்றும், 4% பேர் எந்த கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT