Published : 17 May 2025 01:26 AM
Last Updated : 17 May 2025 01:26 AM
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் செனட் உறுப்பினர்களிடையே உரையாற்றிய இஷாக் தர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “ இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க அரசியல் செயல்முறை அவசியம். பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சிந்து நதி நீரை தடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும்" என்றார்.
இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷொபஸ் ஷெரீபும் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
அதேநேரம், பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்தையும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்ததாக மட்டுமே இருக்கும். ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது. அவர்கள் பயங்கரவாதிகளின் கட்டமைப்பை மூட வேண்டும். இந்தியா பாகிஸ்தான் பிரச்சினையில் மூன்றம் தரப்பு மத்தியஸ்தம் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT