Published : 15 May 2025 06:34 AM
Last Updated : 15 May 2025 06:34 AM
புதுடெல்லி: பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி என போர் நிபுணர் டாம் கூபர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த போர் நிபுணர் டாம் கூபர். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் நடைபெற்ற போர் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதி பிரபலம் அடைந்தவர். அவர் இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றி எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலை மேற்கத்திய ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டன. அவைகள் போர் கள நிலவரத்தை அறியாமல் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தன.
கடந்த வாரம் பாகிஸ்தான் பகுதிக்குள் இந்தியா ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டது என்பது முக்கியம் அல்ல. ஆனால் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களையும், அணு ஆயுத கிடங்குகளையும் குறிவைத்து தாக்கியது இந்தியாவுக்கு கிடைத்த தெளிவான வெற்றி.
இதை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. ஒரு தரப்பு அணு ஆயுத கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும்போது, மறு தரப்பால் பதில் தாக்குதல் நடத்த முடியாமல் போனதுதான் என்னைப் பொறுத்தவரை தெளிவான வெற்றி.
இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானிடம் தொலைதூர ஏவுகணைகள் இல்லை. மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் மற்றும் ஸ்காலப் ஏவுகணைகளுக்கு நிகராக பாகிஸ்தானிடம் ஆயுதம் இல்லை. தன்னிடம் ஏவுகணைகள் இருப்பதாக பாகிஸ்தான் பெருமையாக கூறிக் கொள்ளலாம். அதனால் இந்தியாவின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.
இந்தியாவின் தாக்குதலில் நூர் கான் மற்றும் சர்கோதா முக்கிய போன்ற பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் படு மோசமாக சேதம் அடைந்தன. பாகிஸ்தானின் ராணுவ செயல்பாடுகளுக்கான தலைமை இயக்குனர், இந்திய ராணுவத்தை தொடர்பு கொண்டு போர் நிறுத்தம் குறித்து பேசியதன் மூலம் பாகிஸ்தான் போருக்கு தயாரில்லை என்பதை உணர்த்தியுள்ளார். இவ்வாறு டாம் கூபர் கூறி யுள்ளார்.
அதேபோல் ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவ அதிகாரி ஜான் ஸ்பென்சர் கூறுகையில், “இந்தியா தயாரிப்பு ஆயுதங்கள் தனது பலத்தை நிருபித்துள்ளன. ஆனால் சீன ஆயுதங்களால் தனது பலத்தை நிருபிக்க முடியவில்லை” என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT