Published : 02 May 2025 12:20 AM
Last Updated : 02 May 2025 12:20 AM

தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை: பாக். பிரதமருக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது.

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அதே மாகாணத்தில் உள்ள பஸ்னி விமானப்படை தளம், கில்ஜித் பகுதியில் உள்ள ஸ்கர்டு விமானப்படை தளம், கைபர் பதுன்கவாவில் உள்ள ஸ்வாட் விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவுடன் நேரடி மோதலை தவிர்க்க அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். அப்போது, 'பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அவர் உறுதி அளித்தார். தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். அதேநேரம் இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 'பஹல்காம் தாக்குதல் தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட வேண்டும். குறிப்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று மார்கோ ரூபியோ அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.குறிப்பாக இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அமெரிக்காவின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருதரப்புக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு டாமி புரூஸ் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் நேற்று தொலைபேசியில் பேசினார். அவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அவர் உறுதி அளித்தார்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இருநாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா. அறிவுரை: ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அணுஆயுத பலம் கொண்ட இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். எனவே பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுடன் அந்தோனியோ குத்தேரஸ் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நீட்டிப்பு: இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான கால அவகாசத்தை மறு தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு நேற்று நீட்டித்தது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை உடனடியாக நிறுத்த கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உத்தரவிடப்பட்டது. உரிய அனுமதி பெற்று இந்தியா வந்தவர்கள், இவ்வழியே மே 1-ம் தேதிக்கு முன் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு மறு ஆய்வு செய்யப்பட்டு பகுதி அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பாகிஸ்தான் குடிமக்கள் அட்டாரி சோதனை
சாவடி வழியாக இந்தியாவை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல் காரணமாக மத்திய அரசு கடந்த 24-ம் தேதி பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து 6 நாட்களில் 55 தூதரக ஊழியர்கள் உட்பட 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக நாடு திரும்பியுள்ளனர். இதேபோல் பாகிஸ்தானில் இருந்து 1,465 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவு எல்லையில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானியர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வான்பரப்பில் பாக். விமானங்கள் பறக்க தடை: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. எனினும் பாகிஸ்தானின் விமான சேவை நிறுவனங்கள், இந்திய வான் பரப்பு வழியாக சிங்கப்பூர், மலேசியா, கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வந்தன. தற்போது இந்திய வான் பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மே 23-ம் தேதி வரை தடை நீடிக்கும். அதன்பிறகு அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x