Published : 10 Mar 2025 08:59 AM
Last Updated : 10 Mar 2025 08:59 AM
கனடா நாட்டின் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், அந்நாட்டின் 24வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடா வங்கியின் முன்னாள் தலைவரான அவர் பிரதமராவது அந்நாட்டின் தற்போதைய நிதி சவால் சூழலில் கவனம் பெறுகிறது. மார்க் கார்னி கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராக பணியாற்றியுள்ளார். மேலும், 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. பரஸ்பர வரி விதிப்பை ஏப்ரல் 2 வரை மட்டும் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். அதனால் கனடாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் புதிய பிரதமராகத் தேர்வாகியுள்ளார் மார்க் கார்னி. அவருக்கான சவால்கள் ஏராளமான சாவல்கள் காத்திருப்பதாக அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
85.9 சதவீத வாக்குகள்... முன்னதாக, அரசியல் ரீதியாக ட்ரூடோவுக்காக எதிராக ட்ரம்ப் காய்களை நகர்த்திவந்தார். இந்தநிலையில் அவர் கடந்த ஜனவரியில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, அக்கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னியின் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தலைமை பதவிக்கான போட்டியில் மார்க் கார்னி 1,31,674 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 85.9 சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி விதிப்பு தொடரும்..! - பிரதமராக தேர்வான பின்னர் ஆற்றிய வெற்றி உரையில், “டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது. கனடா அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமலில்தான் இருக்கும்.” என்றார். அமெரிக்க பரஸ்பர வரிக்குப் பணியப்போவதில்லை என்ற அவரது கர்ஜனை கவனம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT