Published : 23 Feb 2025 01:04 PM
Last Updated : 23 Feb 2025 01:04 PM

‘போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடம்’ - தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்

வாடிகன்: 87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), உடல் நலக்குறைவு காரணமாக 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், அவரது இதயம் நன்றாக செயல்படுவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை காலை வெளியான தகவலின்படி, ‘இரவு அவர் நன்றாக ஓய்வெடுத்தார். இன்று காலை போப் பிரான்சிஸ் எழுந்து காலை உணவை உட்கொண்டார்’ என கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது, போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாடிகன் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரத்தத்தில் ஒரு வகை ரத்த அணுக்கள் குறைவாக இருந்ததால் ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் சுய நினைவுடன் தான் இருக்கிறார் என்றும், எனினும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. போப் பிரான்சிஸ் உடல் நலம் பெற உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். போப் பிரான்சிஸ் உடல் நலமற்று இருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x