Published : 29 Jan 2025 10:44 AM
Last Updated : 29 Jan 2025 10:44 AM
மலேசியாவின் பேராக் மாகாணம், ஈப்போ நகரை சேர்ந்தவர் சுலைமான் (28). அவர் உள்ளூரில் ரவுடி தோற்றத்தில் நகர்வலம் வருகிறார். நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் ரவுடி போன்றே நடந்து கொள்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் ரவுடி கிடையாது. 'நானும் ரவுடிதான்' என்ற வடிவேலின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் நகல் ஆவார். ரவுடியாக, வில்லனாக நடித்து நூதன முறையில் அவர் பணம் சம்பாதித்து வருகிறார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உங்களது வீரத்தின் மீது காதலி, மனைவி சந்தேகம் கொள்கிறார்களா? அதற்காக கவலைப்பட வேண்டாம், வில்லனை அடித்து உதைத்து நீங்களும் ஹீரோவாக மாறலாம். உங்கள் காதலி, மனைவி முன்பு நீங்கள் வீர, தீரத்தை நிரூபிக்கலாம்.
ரவுடியாக, வில்லனாக வந்து உங்களிடம் அடிவாங்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் விரும்பிய நாளில், விரும்பிய இடத்தில் சம்பந்தப்பட்ட தங்கையை தொந்தரவு செய்வதுபோல் நான் நடிப்பேன். அந்த நேரத்தில் நீங்கள் என்னை அடித்து உதைத்து மாஸ் ஹீரோவாக மாறலாம். இதற்காக எனக்கு சிறிய கட்டணத்தை செலுத்தினால் போதும்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வேலைநாட்களில் அடிவாங்க ரூ.2,000 கட்டணம். சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் என்னை அடித்து உதைக்க ரூ.3,000 கட்டணம். வெளியூர் என்றால் போக்குவரத்து செலவுக்கு தனியாக பணம் தந்துவிட வேண்டும். எனது செல்போன் எண்ணை இத்துடன் இணைத்துள்ளேன்.
என்னை அழைத்து, அடித்து உதைத்து ஆனந்தமாக வாழுங்கள். இவ்வாறு சுலைமான் குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து பலரும் சுலைமானை அழைத்து, தங்களை ஹீரோவாக காட்டிக் கொள்கின்றனர். அவரது விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பலரும் லைக் தெரிவித்து சுவாரசியமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து சுலைமான் கூறியதாவது: பொதுவாக காதலி, மனைவியுடன் ஓட்டலுக்கு செல்லும் ஆண்கள் என்னை அழைக்கின்றனர். என்னை அழைக்கும் வாடிக்கையாளர், ஓட்டலில் கழிவறை செல்லும் நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் நான் வம்பு செய்வேன். கழிவறையில் இருந்து திரும்பி வரும் எனது வாடிக்கையாளர் என்னை அடித்து உதைத்து பெரிய ஹீரோவாக காட்டிக் கொள்வார்.
எனக்கு கொஞ்சம் அடி, உதை விழும். அதை தாங்கிக் கொள்வேன். இது டபிள்யூ.டபிள்யூ. இ. போட்டி போல இருக்கும். எல்லாமே நடிப்பு. யாருக்கும் இழப்பு கிடையாது. இவ்வாறு சுலைமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மலேசிய காவல் துறை வட்டாரங்கள் கூறும்போது, “மலேசிய சட்ட விதிகளின்படி பொது இடங்களில் பெண்களுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான அபராதம் விதிக்கப்படும். ஆனால் சுலைமான் விவகாரத்தில் யாரும் புகார் அளிக்காததால் அவர் தப்பி வருகிறார்" என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT