Published : 28 Jan 2025 10:12 PM
Last Updated : 28 Jan 2025 10:12 PM
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதை அவர் செய்தியாளர்கள் மத்தியில் சொல்லி இருந்தார். இருப்பினும் இது குறித்து டிக்டாக் மற்றும் மைக்ரோசாப்ட் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
டிக்டாக் செயலியின் அமெரிக்க துணை நிறுவன உரிமையை சீனர்கள் வசமிருந்து கைமாற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். 30 நாட்களில் டிக்டாக் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் டிக்டாக்: அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ ஷேரிங் தளங்களில் டிக்டாக் செயலி முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் சீனர்கள் உரிமை கொண்டுள்ள டிக்டாக்கின் தாய் நிறுவனமான ‘பைட் டேன்ஸ்’ நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவன உரிமை சீனர்கள் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவுக்கான காலக்கெடு முந்தைய பைடன் தலைமையிலான ஆட்சியில் ஜனவரி 19-ம் தேதி அன்று நிறைவடைந்தது. தேசத்தின் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் நடவடிக்கையும் அம்லானது.
கடந்த ஜனவரி 20-ம் தேதி ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் டிக்டாக் உரிமை மாற்றம் தொடர்பான காலக்கெடுவை 75 நாட்கள் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில்தான் அவர் இதை கூறியுள்ளார்.
அமெரிக்காவில் டிக்டாக்கின் சந்தை மதிப்பு கூடிக் கொண்டே இருக்கின்ற காரணத்தால் டிக்டாக் நிறுவன பங்கில் சுமார் 50 சதவீதம் அமெரிக்கர்கள் வசம் இருக்க வேண்டியது அவசியம் என ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் மட்டும் சுமார் 17 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த 2020-ல் பல்வேறு அரசு துறைகளின் சாதனங்களில் டிக்டாக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அப்போது அதிபராக ட்ரம்ப் இருந்தார். தொடர்ந்து அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிக்டாக்கை தடை செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். இருப்பினும் நீதிமன்றம் தலையிட்டு அந்த தடையை நீக்கியது. 2021 ஜூலையில் ட்ரம்ப் பிறப்பித்த டிக்டாக் தடை உத்தரவை அப்போதைய அதிபர் பைடன் ரத்து செய்தார். 2024-ல் சீனர்கள் வசம் உள்ள உரிமையை கைமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT