Published : 02 Jan 2023 06:26 AM
Last Updated : 02 Jan 2023 06:26 AM

மாணவர்களை மாமனிதர்கள் ஆக்குவோம்

காமாட்சி ஷியாம்சுந்தர்

தனது மூன்று வயதில் பெற்றோரின் கரங்களைப் பற்றி நடந்து பள்ளிக்கு வரும் ஒரு குழந்தை, ஆசிரியரின் கரங்களில் ஒப்படைக்கப்படுகிறது. தடம் பார்த்து நடக்கச் சொல்லித் தரும் ஆசிரியரே, அவர்களை வரலாற்றில் தடம் பதித்திடவும் கற்றுத் தருகிறார்.

எமது பள்ளியில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் நடந்து முடிந்த தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததன் விளைவாக பொதுத்தேர்வு எழுதுகின்ற அனைத்து மாணவர்களிடமும் கருத்துக்கேட்பு நடத்தலாம் என்று முடிவு செய்தேன். பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மாணவர்கள் படிக்கும்போது எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றிய புரிதல் ஆசிரியருக்கு நிச்சயம் தேவை என்ற நோக்கில் இந்த கருத்து கணிப்பினை ஏற்பாடு செய்தேன். அன்றைய வகுப்பின் விவாதப் பொருளாகவும் இதனைக் கருத்தில் கொண்டு கருத்துக்களை பகிரும்படியும் கூறினேன்.

அவர்களது விழுமிய வகுப்புக் கல்வி நோட்டில் கருத்துக்களை தைரியமாக பகிரும்படி உற்சாகமூட்டிய பின், தங்களது எண்ணங்களை பகிர்ந்தனர்; இதில் ஆசிரியர் பாடம் எடுப்பதில் தொய்வு இருந்தாலும், அதனைப் பற்றியும் எழுதலாம். உங்களது உடல்நலம் சார்ந்தோ அல்லது உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இருந்தாலும் எழுதலாம் என்று கூறியிருந்தேன்.

ஒவ்வொரு மாணவனும் பல்வேறு விதமாக தங்களது கருத்துக்களை வெவ்வேறு விதங்களில் பதிவிட்டிருந்தனர். தினசரி நடத்துகின்ற பாடங்களை அன்றாடம் படிப்பதற்கு நேரம்ஒதுக்காமல் மிகவும் அலட்சியமாக இருந்துவிட்டேன் என்றனர் ஒரு சில மாணவர்கள்.

தேர்வில் எந்த கேள்விக்கு என்ன பதில் எழுதுவது என்று குழப்பம் ஏற்பட்டது. அலைபேசியை பார்த்து எனது நேரத்தை வீணாக்கிவிட்டேன். எதையுமே புரிந்து படிக்காமல் மேலோட்டமாக படித்தது என் தவறுதான்.

தினமும் குடித்துவிட்டு வரும் அப்பாவுடன் அம்மா சண்டையிடும்போது பெரிதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இருந்து எனது நேரத்தை வீணாக்கிவிட்டேன். அலைபேசியில் இணையத்தில் நேரத்தை அதிகமாக செலவு செய்தேன்.

youtube, whatsapp, instagram என்று நண்பர்களுடன் நேரம் போவதே தெரியாமல் அரட்டை அடித்தேன். அதிகாலையில் எழுந்து படிப்பது மிகக் கடினமாக உள்ளது என்று உண்மையாக கருத்துக்களை பகிர்ந்திருந்தனர் எனது மாணவர்கள்.

இவை அனைத்திற்கும் தீர்வுதான் என்ன? என்று மாணவர்களிடமே கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை. பின்பு அதற்கான தீர்வுகளை கரும் பலகையில் எழுதினேன். படிப்பது சிறிது நேரம் என் றாலும்கூட கவனச்சிதறலின்றி படிக்கும்படி கூறினேன். அதனை ஒரு முறையேனும் எழுதிப் பார்க்கும்படி கூறினேன். மீண்டும் அதனை ஞாபகப்படுத்தி பார்க்கும்படி கூறினேன். இதனை சுருக்கமாக கூறினால் C R W R டெக்னிக் என்று கூறலாம்.அதாவது Concentrate Read Write Recall.

கவனத்தை ஒருமுகப்படுத்த யோகா, மூச்சுப் பயிற்சியை செய்யும்படி கூறினேன். படிக்கும்போது செல்போன் கூடாது. டிவி இல்லாத அறையில் படிக்கலாம். மேற்கூறியவற்றை கடைபிடித்து, வரும் தேர்வுகளில் நிச்சயமாக நல்ல மதிப்பெண் எடுப்பதாக உறுதி கூறினர், எனது மாணவர்கள்.

“தடம் பார்த்து நடக்க மட்டுமல்ல;

சரித்திரத்தில் தடம் பதித்திடவும் கற்றுத்தந்து

மாணவர்களை மாமனிதர்கள் ஆக்குவோம்”

கட்டுரையாளர்

தலைமை ஆசிரியர்

பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி

நாகமலை,மதுரை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x