Published : 06 Dec 2022 06:15 AM
Last Updated : 06 Dec 2022 06:15 AM

தேடலே... கல்வி, பசியே.... பாதை

முழுமதி சுப்ரமணியன்

ஆதி மனிதன் உணவைத் தேடினான். சேகரிக்கக் கற்றுக்கொண்டான். பின்னர் வேட்டையாடக் கற்றுக்கொண்டான். உணவு தீர்ந்தது. பசி அவனை துரத்தியது. உணவைத் தேடி அலைந்தான். ஆற்றங்கரைகளில் தங்கினான். வேளாண்மையைக் கற்றான். கருவிகளால் விளைச்சல் பெருகியது. சேமிப்பைக் கற்றுக்கொண்டான். வணிகத்தைக் கற்றதால், அதன் விளைவு வாகனங்கள் உருவாகின. தேவைகளைத் தேடினான். அப்பொழுது தன் திறமைகளை உணர்ந்தான். இப்படி மனிதனின் தேடல் குறையவில்லை. முடியவும் இல்லை.

பயம் போனது பாதை உருவானது: தேடினான்... தேடுகிறான்... தேடிக் கொண்டே யிருக்கிறான். பூமியை உழுதான். விதை விதைத்தான். உணவு கிடைத்தது. அப்பொழுது உழைப்பை புரிந்துகொண்டான். மேலும் தேடிக்கொண்டே நடந்தான். நடந்தான். நடந்து, நடந்து பூமி எங்கும் பரவினான் மனிதன். மலைகளைத் தாண்டினான். சமவெளிகளைக் கடந்தான். பள்ளத்தாக்கில் பயணித்தான். பயத்தை துறந்தான். பாதைகளை உருவாக்கினான்.

இயற்கையோடு இணைந்தான். ஆறு, ஏரி, கடல் என அனைத்திலும் இரண்டற கலந்தான். வீழ்ந்தான், எழுந்தான், உயர்ந்தான். தேடலில் கிடைத்த அனைத்தும் தேவைகள் ஆகின. தேடலைத் தொடர்ந்தான். நேற்று பூமியை அளந்த மனிதன், இன்று பூமிக்குள் இறங்கி தேடுகிறான். பூமியை தோண்டி நீரும், அதன் பின்னே பெட்ரோலியமும், தொடர்ந்து நிலக்கரியையும், வைரமும் பூமித்தாய் சேர்த்து வைத்த, ஒளித்து வைத்த, புதையலை கண்டு பிரமித்தான்.

துணிந்தவன் ஆழ்கடலில் முத்தெடுத்தான்: அடுத்து கடற்கரையில் நடந்து காற்று வாங்கினான். கடலை உற்று நோக்கியவன் பயத்தை மறந்து, கடலுக்குள் பயணிக்கத் தொடங்கினான். கடலுக்குள் சங்குகளையும், சிப்பிகளையும் சேகரித்தான். கட்டு மரம் செய்து கடலுக்குள் சென்று மீன் பிடித்தான். மீன் உணவானது. இன்னும் சற்றேதுணிந்த மனிதன் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத் தான்.

இயற்கையின் விந்தைகளைக் கண்டவனின் கண்கள் விரிந்தன. கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. ஆழத்தில் பயணிக்கும்போது அது கடலோ, அல்லது நிலமோ மதிப்புமிக்க பொருள்கள் கிடைப் பதை உணர்ந்தான். ஆழத்தில் இருப்பனவற்றில் மதிப்பு பல மடங்கு என்பதை உணர்ந்தவன் ஆபத்தை கடக்கவும் ஆபத்தை கடந்து பயணிக் கவும் கற்றுக் கொண்டான். இயற்கையை நண்ப னாக்கி காலப்போக்கில் ஆளவும் செய்தான் மனிதன்.

தேடலின் விரிவாக்கம்: காற்றை சுவாசிக்க தெரிந்தவன் பிற்காலத்தில் காற்றில் ஒலி, ஒளிகளை பரப்பி விஞ்ஞான விந்தைகளை உருவாக்கினான். பறவைகளை உற்று நோக்கியவன் விமானத்தை வடிவமைத்தான். மீன்களை உணவாக்கிய மனிதன் நாளடைவில் உற்று நோக்கி, படகையும் உருவாக்கினான். படகிலிருந்து கப்பலும் நீர்முழ்கி கப்பலும் உருவானது. காற்றையும் கடல் நீரையும் ஆளும் ஆற்றல் பெற்றான்.

வானத்தை உற்று நோக்கிய மனிதன் கோள்களையும் நட்சத்திரங்களையும் அடையாளம் கண்டான். வானத்தில் தன் பயணத்தை ஆகாய விமானம் என்றும், செயற்கை கோள்கள் என்றும் விரிவுபடுத்தினான். ஆதலால் மாணவர்களே தேடுங்கள். தேடல் விலைமதிப்பில்லாப் பொக்கிஷங்களைத் தரும். ஆம், தேடலே கல்வி. நல்ல நூல்களைத் தேடுங்கள். நூல்களுக்குள் நல்லவனவற்றறை தேடுங்கள். நூல்களை விரும்பி வாசியுங்கள். வாசித்தலை சுவாசியுங்கள்.

படைப்பவர்களுக்கு அழிவில்லை: தேர்விற்காக படிப்பது ஒழியட்டும். மாணவர்களே நீங்கள் மதிப்பெண் பெறும் இயந்திரம் அல்ல. மாறாக நீங்கள் மதிப்புமிக்க செல்வங்கள். படித்தவர்கள் வாழ்வார்கள். படைப்பவர்கள் மறைந்த பின்பும் வாழ்வார்கள். படைப்பவர் யாவரும் இறைவனே. இறைவனுக்கு அழிவில்லை. ஆம் மறை தந்த நம் வள்ளுவரும், தமிழ்ப் புலவன் பாரதியும் தமிழ் தந்த இறையே.

இவர்கள் எல்லாம் மறைந்த பின்பும் “மறையாக மறையாது வாழும் மாமனிதர்கள்”. படிப்போம் இவர்களது எழுத்துகளை. படைப்போம் நாமும் இவர்கள் போலவே.. ஆதலால் மாணவர்களே நாள்தோறும் தேடலைக் கற்றுக்கொள்ளுங்கள். தேடலை வளர்த்துக்கொள்ளுங்கள். - கட்டுரையாளர், கல்வியாளர், மயிலாடுதுறை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x