Published : 13 May 2025 07:23 AM
Last Updated : 13 May 2025 07:23 AM

கோடை விடுமுறையில் பூ வியாபார விளையாட்டு

நாம் எண்பதுகளில் விளையாடிய விளையாட்டுகள் இன்னும் இருக்கின்றன. காற்றில், வீதியில், வீட்டின் மூலையில் விளையாட்டுகள் குழந்தைகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. யாருமற்ற தனிமையையும் சத்தமற்ற நாட்களையும் அவை ஒருபோதும் விரும்பியதே இல்லை.

குழந்தைகளை என்னிடம் அனுப்புங்கள், அவர்கள் விளையாடட்டும் என்ற பெருங்குரலெடுத்து ஓலமிடுகிறது. அந்த ஓலம் பெரும்பாலான பெற்றோர்களின் காதுகளில் விழுவதே இல்லை. குழந்தைகளின் வளர்ச்சிப்பருவத்தில் இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலான காலம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தக் காலச்சூழலில் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் ஐம்பது சதவீதம் வளர்ந்து விடுகிறது. இந்தக் காலத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி குழந்தைகள் பார்த்தல், கேட்டல், பேசுதல், போன்ற திறன்களில் கவனம் செலுத்த வேண்டும்.

விளையாட்டு எதைக் கற்றுத்தருகிறது? - இத்தனை திறன்களையும் கற்பித்தல் மூலமாக ஒருபோதும் முழுமையாகக் கொண்டு சேர்த்துவிட முடியாது. அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க ஒரே வழி விளையாட்டுதான். குழந்தைகளை விளையாட அனுமதிப்பதன் மூலமாக மட்டுமே இத்தனை திறன்களையும் ஒரே நேரத்தில் கற்றுவிடுகிறார்கள். அதுவும் சுயமாக.

வகுப்பறையில் எழுத வைத்து, மனப்பாடம் செய்ய வைத்து, ஒப்பிக்க வைத்து கற்றுத் தர முடியாததை வாழ்நாள் பாடமாக விளையாட்டுகள் குழந்தைகளுக்கு லாகவமாகச் சொல்லிக் கொடுத்துவிடுகின்றன. கோடை விடுமுறையில் இருக்கும் மகள் செம்மொழியைக் கடைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன்.

வீட்டிற்கு வரும்போதே அவளோடு படிக்கும் தோழியைப் பார்த்துவிட்டாள். தோழியோடு சேர்ந்து தெருவில் விளையாட அனுமதிக்கும்படி கேட்டாள். குழந்தைகள் விளையாடுகிற தெருவிற்கு அழைத்துச் சென்று விளையாடவிட்டுவிட்டு அவர்கள் விளையாடுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

பூவே! பூவே! பூவே! - ஐந்து குழந்தைகள் ஏற்கெனவே விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவள் சென்றவுடன் அவர்கள் முன்பு விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டின் வடிவத்தை மாற்றுகிறார்கள். செம்மொழியை அவள் பள்ளித்தோழி அழைத்துச் சென்று வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண் குழந்தையிடம் “இவ தான் என் அக்காவாம். சரியா? நாங்க ரெண்டு பேரும் பூ வாங்க வருவோம்” என்று சொல்லி கையிலிருந்த பணத்தின் வடிவில் அழகாகக் கிழிக்கப்பட்ட தாளினைப் பணத்தை எண்ணுவதைப் போல எண்ணி செம்மொழியின் கையில் கொடுத்தாள்.

“இதுதான் பணம். இதை வச்சுதான் நாம பூ வாங்க போறோம்”. இருவரும் பணத்தோடு பூக்கார அம்மாவாக அமர்ந்திருக்கிற குழந்தையிடம் செல்கிறார்கள். அந்தக் குழந்தை அக்கம் பக்கத்தில் உள்ள செடிகளில் இருந்து பூக்களைப் பறித்துவந்து தனக்கு அருகில் வைத்துப் பூக்கடையை உருவாக்கி இருக்கிறாள்.

மிக நேர்த்தியாக ஒரு பூக்காரப் பெண் எப்படிப் பூவை விற்க “பூவே பூவே பூவே” எனக் குரல் எழுப்புவாரோ அச்சு அசலாக அதேபோன்று அழைத்தாள். இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து சென்று பூவிற்கும் அந்தக் குழந்தையிடம் “பூ என்ன விலை?” என்கிறார்கள்.

“இது பத்து ரூபாய், இது இருபது ரூபாய்” எனப் பூக்களைக் கை நீட்டிக் காண்பித்து விலையைச் சொல்கிறாள். “அக்கா இந்தாங்க உங்களுக்குக் கால் வருது பாருங்க யாருனு எடுத்துப் பேசுங்க” என கையிலிருக்கும் ஒரு பழைய பயன்பாட்டில் இல்லாத அலைபேசியை எடுத்துச் செம்மொழியிடம் நீட்டுகிறாள்.

கையில் வாங்கியவள் “எனக்கு இல்ல உனக்குத் தான் யாரோ பேசறாங்க, இந்தா நீயே பேசு” அலைபேசியை அவளிடமே திருப்பித் தருகிறாள். அலைபேசியை வாங்கியவள் காதில் வைத்து” ஹலோ யார் பேசறீங்க” எனப் பேசத் தொடங்கி விட்டாள். இப்படியே விளையாட்டு நீண்டு கொண்டே போகிறது. அவர்களோடு அமர்ந்து விளையாட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஒருவர் பார்க்கிறார் என்கிற எந்தத் தயக்கமும் அவர்களிடம் இல்லை. மகிழ்ச்சியோடு அச்சமற்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகுப்பறைக்குள் ஆசிரியர் கற்றுக்கொடுக்க முயலும் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என அனைத்துக் கூறுகளுக்கும் மேலாக ஒன்றிணைதல், ஒருங்கிணைத்தல், விட்டுக் கொடுத்தல், உரையாடுதல் எனப் பல்வேறு திறன்கள் அந்த விளையாட்டுக்குள் பொதிந்து கிடக்கிறன. விளையாட்டு இடம் ஆசிரியர் அற்ற ஒரு வகுப்பறையாக மகிழ்ச்சியாக அனைத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

- கட்டுரையாளர்: குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், இயக்குநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி; cholan1981@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x