Published : 22 Apr 2025 06:37 AM
Last Updated : 22 Apr 2025 06:37 AM

தனித்துவமான விருப்பத்துக்கு ஏற்ப வாசிப்பை ஊக்குவிப்போம்

ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் கவிதை எழுதி இருக்கிறேன் என்று தனது நோட்டு புத்தகத்தின் கடைசி பக்கங்களை சில நாட்களுக்கு முன்பு என்னிடம் காண்பித்தார். “நீதான் என் வானம், நீ இல்லை என்றால் நான் காணோம்” என்பது மாதிரியான காதல் கவிதைகள் அதில் எழுதப்பட்டிருந்தன.

எழுத வேண்டும் என்கிற மாணவரின் ஆர்வத்தைப் பாராட்டினாலும், காதல் கவிதைகள் என்பதால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அந்த மாணவரிடம் காதல் உணர்வுகள் எதுவும் இல்லை. ஆனால், கவிதைகள் என்றாலே அது காதல் கவிதைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்க வைத்தது சமூகத்தின் குற்றம், ஊடகங்களின் குற்றம், ஆசிரியர்களின் குற்றம்.

என்ன செய்ய வேண்டும்? - உண்மையில் சமூகத்தின் அங்கமான ஆசிரியர்கள் அந்த மாணவருக்கு அறிமுகம் செய்ய வேண்டியது நல்ல வாசிப்புப் பழக்கத்தைத்தான். குழந்தை கவிதைகள், சரித்திரக்கதைகள், அமானுஷ்ய கதைகள், சித்திரப் புத்தகங்கள் (காமிக்ஸ்) போன்றவற்றை வாசிக்க கொடுத்தேன். இப்படி செய்யும்போது ஆறாம் வகுப்பு மாணவரிடம் இருந்து இந்த சமூகத்தைச் சீர்திருத்தக் கூடிய நெருப்பு கவிதைகள் உருவெடுக்கும்.

அதுபோலவே இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்றபோது அங்கிருந்த சிறுவன் தன் கையில் கிடைத்த பேட்டரியையும் வயர்களையும் வைத்துக்கொண்டு ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். நல்லவேளை அந்தச் சிறுவனின் பெற்றோர் அதை தடுக்கவில்லை.

ஏதாவது விளையாடிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். அந்த சிறுவனுக்கு முறையாக அறிவியல் செய்முறை பயிற்சி நூல்களை வாங்கி கொடுக்கும்போது சின்ன சின்ன கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார். அது அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை பின் நாட்களில் பெற்றுத் தரும்.

போதைப் பழக்கத்துக்கு ஆங்காங்கே சில மாணவர்கள் ஆளாகி விடுகிறார்கள் என்று குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். நிறைய மருத்துவமனைகளில் புற்றுநோயால் விளையும் தீமைகளைப் படங்களாக வைத்திருப்பார்கள். பார்க்கும்போதே நமக்குள் ஒரு அச்சம் பற்றிக்கொள்ளும்.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றால் விளையும் தீமைகளை அந்தப் படங்கள் நமக்குக் காட்டி விடுகின்றன. இதுபோல போதைப் பழக்கத்தால் ஒரு மனித உடல் எப்படி கெட்டுப் போகிறது என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள, அது தொடர்பான புத்தகங்களை பொதுவான வாசிப்புக்கு வழங்க வேண்டும். அது, அவர்களுக்குள் எச்சரிக்கை மணியடிக்கும் வாய்ப்பு உள்ளது.

வாசம் வீசும் புத்தகங்கள்.. சமுதாயம் சீரழிந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே போனால் யார்தான் அதைச் சீர்படுத்துவது? கோடை விடுமுறை நாட்களைப் பயனுள்ள வகையில் மாணவர்கள் பயன்படுத்த வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தலாமே. பள்ளிக்கூடங்கள் நல்ல புத்தகங்களை மாணவர்களுக்குப் பரிந்துரை செய்து புத்தகங்கள் பற்றிய விமர்சனங்களை எழுதி வரச் செய்யலாம்.

கவிதை எழுதும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை கவிதைகள் எழுதுவதற்குப் பயிற்சி அளிப்பதுடன், ஆத்திசூடி கவிதைகள், திருக்குறள் கவிதைகள் என்று ஒப்படைப்புகள் வழங்கினால் அவர்களது படைப்புத் திறமையை இந்த கோடைகாலத்தில் மேம்படுத்தலாம்.

நாம் பறப்பதற்கு புதிய வானமும் கிடைக்கிறது. புத்தகங்கள் தான் ஒரு மாணவனை விமானியாகவும், விஞ்ஞானியாகவும், எழுத்தாளனாகவும், அரசியல்வாதியாகவும், இசைஞானியாகவும் மாற்றுகிறது. உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தக வாசிப்பு பயிற்சிதான் வலிமை சேர்க்கிறது. அதேசமயம் அலைபேசி மூலம் வாசிக்கிறேன் என்று புத்தகத்திலிருந்து விலகி இருக்கலாகாது.

நீங்கள் அலைபேசியில் விருப்பப்படுகிற மாதிரி படித்துவிட முடியாது. அலைபேசியில் நாம் படிக்க தேடிச் செல்வது ஒன்றும் அலைபேசி படிக்கச் சொல்வது ஒன்றுமாக இருக்கிறது. நாம் ஒன்றைத் தேடிச் செல்லும்போது விரும்பத்தகாத பல செய்திகள் உங்கள் முன்னே வந்து நிற்கின்றன.

நீங்கள் தேடிய புத்தகத்தை விட்டு விட்டுத் தேடாத தேவையில்லாதவற்றைப் பார்க்கும் நிர்ப்பந்தம் வந்துவிடக்கூடும். எனவே வாசிப்பு என்பது வாசம் மிக்க புத்தகங்களை வாசிப்பது தான். கோடையில் சில புத்தகங்களைத் திட்டமிட்டுப் படியுங்கள். பள்ளி தொடங்கும்போது இன்னும் ஒரு சுற்று நீங்கள் வளர்ந்திருப்பீர்கள்.

- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர்; suriyadsk@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x