Published : 27 May 2025 07:13 AM
Last Updated : 27 May 2025 07:13 AM

ஓர் ஆசிரியரின் இதயம் தேடி! | வகுப்பறை புதிது 21

உலகில் கிடைப்பதற்கு அபூர்வ புதையல் ஒன்று உண்டெனில் அது அர்ப்பணிப்பு மிக்க ஓர் ஆசிரியரின் இதயம்தான் என்பேன். - டோனி டான்சா

ஆசிரியர் தொழில் செய்வதற்குப் பிறந்தவர் அல்ல டோனி டான்சா. இருப்பினும் ஆசிரியரின் இதயத்தோடு பிறந்ததாக அறிவித்துக்கொண்டார். அவரது, ‘எனக்கு ஆசிரியர்களாக இருந்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ (I’d Like To Apologize To Every Teacher I Had) எனும் புத்தகத்தை வாசித்தபோது நெக்குருகிப் போய் அழவும் நேர்ந்தது.

நதி போன்ற வாழ்க்கை: நியூயார்க் நகரம், புரூக் லின் பகுதியில் தூய்மை பணியாளர் தந்தைக்கும் நூலகர் தாய்க்கும் பிறந்த டோனி டான்சா குழந்தைப் பருவத்திலேயே ஆசிரியராக விரும்பினார். அமெரிக்க அரசு பள்ளியில் விலையற்ற கல்வி பெற்றார். வசதி படைத்தவர்கள்போல் உயர்கல்வி பெற முடியாதச் சூழலில் மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றைச் சிறப்பாக விளையாடும் திறமை மூலம் உதவித்தொகை பெற்று டுபியூக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

பிறகு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாறினார். ஒரு குத்துச்சண்டை போட்டியின்போது ஹாலிவூட் கதாபாத் திரங்கள் தேடி வந்தன. சக்கைப்போடு போட்ட, ‘டான் ஜான்’, ‘கிராஷ்’ போன்ற திரைப்படங்கள் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பும் வாய்த்தது.

அந்த வரிசையில், ‘டோனி டன்சா ஷோ’ வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது, கறுப்பின குழந்தைகள் அதிகம் படிக்கும் வடகிழக்கு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக மாணவர்களோடு வகுப்பறையிலிருந்து ஒரு தொடர் செய்யும் யோசனை உதித்தது.

தன்னுடன் சேர்ந்து தொலைக்காட்சி தொடர் எடுக்க வந்த இயக்குநர் முதல் ஒளிப்பதிவாளர்வரை அத்தனை பேரும் தனியார்ப் பள்ளியிலும், பணம் படைத்தோருக்கான பல்கலைக்கழகங்களிலும் படித்தவர்கள். கல்வி குறித்த அவர்களின் பார்வை வேறாக இருப்பது படப்பிடிப்பின்போது டோனிக்குப் புரிந்தது. தொடர் சுவாரசியமாக இல்லை எனச் சொல்லி மூன்று மாதங்களில் அந்த பள்ளியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஆனால், எந்த வகுப்பறையில் இத்தனை நாட்கள் டோனி நடித்துவந்தாரோ அந்த மாணவர்கள் அவர்தான் ஆசிரியர் என்றே நம்பினர். எனவே நடிப்புத் தொழிலை விட்டுவிட்டு அந்த ஒரு வருடம் முழுவதும் சாதாரண ஆசிரியராக அந்த வகுப்பறைக்குத் தினந்தோறும் சென்றார்.

தனியாவின் 100 ஆடைகள்: சிறுமி தனியா தினந்தோறும் பள்ளிக்கு ஒரே உடையில் வருகிறாள். சக மாணவ, மாணவிகளால் கேலி செய்யப்படுகிறாள். “நீங்கள் அணிந்து வருவதை விட அற்புதமான 100 ஆடைகள் என்னிடம் உள்ளன” என்று கேலி செய்பவர்களிடம் தினமும் அவள் சொல்வதை டோனி கவனிக்கிறார்.

ஒரு நாள் தனியா பள்ளிக்கு வரவில்லை. பிறகு ஒரு வாரம் வரவில்லை. ஒருநாள் பள்ளியில் டோனி டான்சாவுக்கு பார்சல் ஒன்று வருகிறது. அதைப் பிரித்துப் பார்க்கிறார். வண்ணமயமாக 100 அற்புத ஆடைகளின் ஓவியங்களை வரைந்து தனியா அவருக்கு அனுப்பியிருக்கிறாள்.

“நான் பொய் சொல்லவில்லை சார் என்னிடம் நூறு புது ஆடைகள் உள்ளன” என்று எழுதியிருக்கிறாள். வீட்டுக்கே சென்று அவளை அழைத்து வந்து அவள் தீட்டிய 100 ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தி அவளது திறமையை உலகறியச் செய்கிறார் டோனி.

இப்படி எத்தனையோ அனுபவங்களை இந்த புத்தகம் பேசுகிறது. பாடம் குறித்த அறிவை விடக் குழந்தைகளுக்காக உருகும் இதயம் கொண்டவனே உண்மையான ஆசிரியர் என்பதை டோனியின் அனுபவங்கள் சிலிர்க்க வைத்து, அழ வைத்து, சிரிக்க வைத்து நமக்கு உணர்த்துகின்றன.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x