Published : 13 May 2025 07:10 AM
Last Updated : 13 May 2025 07:10 AM
குழந்தைகளுக்கான கல்வி பள்ளிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது அபத்தமான கருதுகோள். ஒரு குழந்தைக்குக் கல்வி புகட்டுவது ஒட்டுமொத்த ஊரின் கடமை - பேராசிரியர் கேட் மூடி.
‘கியூபாவின் மக்கள் பேராசிரியர்கள்: அனைவருக்கும் கல்வி எனும் நிலையை நாடு எவ்வாறு அடைந்தது’ எனும் தலைப்பில் பேராசிரியர் கேட் மூடி எழுதிய நூலை வாசித்ததும் கல்வி குறித்த எனது பார்வையே மாறிப் போனது. 1959 புரட்சிக்குப் பிறகு கியூபாவில் அனைத்திலும் பற்றாக்குறை ஏற்பட்டது. நெருக்கடியான சூழலிலும் முழு மக்கள் தொகைக்கும் வெற்றிகரமாகக் கல்வி கற்பிக்கும் சாதனையை அந்நாட்டு ‘மக்கள் பேராசிரியர்கள்’ படைத்துள்ளனர்.
வாழிட கல்வி: கியூபா கல்வி முறைப்படி குழந்தை பிறந்ததும் ‘மக்கள் பேராசிரியர்கள்’ என்னும் கல்வித் துறையிடம் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள், உழைப்பாளிகள். பிரம்மாண்டமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் கூட்டாக வசிக்கிறார்கள்.
பொருளாதாரச் சுமை காரணமாக வாழ்க்கையைக் கூட்டாக வாழ அவர்கள் பழகிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் 120 பேர் இணைந்து பயணிக்கும் வாகனங்களை மட்டுமே நீங்கள் கியூபாவில் பார்க்க முடியும். அந்த அளவுக்கு எரிபொருளையும் நாட்டின் சொத்தாக அவர்கள் கருதும் மின்சாரம் உள்பட அனைத்தையும் சேமிக்கிறார்கள்.
மூன்று வயதை எட்டியதும் குழந்தை இருக்கும் இடத்தை தேடி அரசின் ‘வாழிடக் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளையும் ஓரிடத்தில் வரவழைத்து அங்கேயே கற்றல் தொடங்குகிறது. பாடுவது, இசைக்கருவி மீட்டுவது அங்கே அறிமுகமாகிறது. ஏழு வயதில்தான் குழந்தை பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறது. இரண்டு தெருவுக்கு ஒரு பள்ளி. சற்றே வளர்ந்த மாணவர்கள் ஒரு வீதியில் அனைத்து குழந்தைகளையும் ஒருசேர வரவழைத்து நீண்ட வரிசையில் நடந்தே பள்ளிக்கு அழைத்துச் செல்வதை அங்கு சர்வ சாதாரணமாகக் காணலாம்.
பல்கலைக்கழகம் வரை கட்டணமின்றி கல்வி வழங்கப்படுகிறது. கல்வி மட்டுமல்ல இரண்டரை வயதில் தொடங்கும் தடுப்பூசியின் பயணம் ஒவ்வொரு மாதமும் அந்தக் குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனை முறைப்படி செய்யப்பட்டு எத்தகைய கட்டணமுமின்றி சுகாதார முறையில் கண்காணிக்கப்பட்டுப் பாதுகாப்பாகக் குழந்தை வளர்வதற்குக் கல்வி நிலையங்கள் வழி வகுக்கின்றன.
அனுபவச் சான்றிதழ்கள்: காலாண்டு, அரையாண்டு விடுமுறைக்குப் பதில் விதைப்பின்போதும் அறுவடைக் காலத்திலும் பொது விடுமுறை பள்ளிகளுக்கு விடப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் பள்ளிக்கூடங்களே விவசாய இடுபொருட்களைக் கொண்டுவந்து வைக்கின்ற மையமாக ஊருக்குப் பயன்படுகிறது. கியூபாவில் பள்ளிக்கூடம் ஊருக்குப் பயன்படுகிற ஒரு மைய கட்டிடம்.
ஊரே சேர்ந்து குழந்தைக்குக் கல்வி புகட்டுகிறது. இது எப்படி என்றால், ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளி மாணவரும் ஊருக்குள் தூய்மைப் பணியைக் கண்டிப்பாக வாரத்துக்குக் குறைந்தபட்சம் 6 மணி நேரம் மேற்கொள்ள வேண்டும். அதைவிட, 10ஆம் வகுப்பின் இறுதியில் நாம் பொதுத் தேர்வு நடத்துவதுபோல் அங்கு வேறொன்று நடத்தப்படுகிறது.
எழுத்துத் தேர்வுகளைவிடவும் ஆண்டு முழுவதும் மாணவர்கள் பல்வேறு திட்டங்களில் பங்கேற்று பயிற்சி பெற்று வாங்கும் சான்றிதழ்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மின்சாரத் துறையோடு இணைந்து 20 நாட்களுக்குப் பணி, மருத்துவத் துறையோடு இணைந்து மருத்துவமனைகளில் உதவியாளராகப் பணி, கப்பல் கட்டுமானம், விமான தளம் என அவரவர் ஊரோடு சம்பந்தப்பட்டவற்றில் இணைந்து பணி ஆகியவற்றைச் செய்து மூன்று சான்றிதழ்களை மாணவர்கள் பெற வேண்டும். ஊரே சேர்ந்து குழந்தைக்குக் கல்வி அளிப்பதென்பது இதுதானே.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT