Published : 06 May 2025 07:30 AM
Last Updated : 06 May 2025 07:30 AM
பள்ளிகளுக்கு இடையே, மாவட்டங் களுக்கு இடையே ஒப்பிடுவதைவிட ஒரே பள்ளியில் சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையிலான தரத்தை ஒப்பிடுவதே பொருத்தமானது. - எம் நைட் ஷியாமளன்.
தமிழகப் பள்ளிகளில் கற்றல் திறனை ஊக்குவிக்க ‘100 நாள் சவால்’ திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்திவிட்டு அங்கு பள்ளிக் கல்வி அமைச்சரை அழைக்கலாம். அவரோடு வருகிற குழுவினர், யாரை வேண்டுமானாலும் சோதனை செய்து பார்க்கலாம் எனும் சிறப்பான முன்முயற்சி இது.
இந்தச் சவால், கற்றலில் சிறந்த பள்ளிக்கும் பின்தங்கிய பள்ளிக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளனின் ‘ஐந்து விரல் பள்ளி’ சரியான தீர்வாக இருக்கும்.
அனைவரும் முன்னேற: ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, ‘த சிக்ஸ்த் சென்ஸ்’, குழந்தைகளின் செல்ல எலியான, ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ உள்ளிட்ட படங்களை உருவாக்கியவர் இவர். மனைவியோடு இணைந்து, ஆப்பிரிக்க அமெரிக்கக் கறுப்பின குழந்தைகளின் கல்விக்கு உதவிட ‘ஷியாமளன் ஃபவுண்டேஷன்’ அமைப்பை ஏற்படுத்தினார். தான் பெற்ற அனுபவ பாடத்திலிருந்து ‘ஐ காட் ஸ்கூல்ட்’ (I GOT SCHOOLED) எனும் நூலைப் எழுதியுள்ளார். பள்ளிகளில் கற்றலை மேம்படுத்த ஐந்து முக்கிய வழிகளை விளக்கும், ‘ஐந்து விரல் பள்ளி’ தத்துவம் இந்நூலில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோரின் கல்வி நிலை, வீட்டில் இருக்கும் கற்றல் சூழல், பள்ளியையும் கல்வியையும் அந்தப் பகுதியில் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பது உள்படப் பலவற்றை முதல் அத்தியாயம் அலசுகிறது. அதுவே, ஐந்து கூறுகள் ஒரு பள்ளியில் சிறப்பாக இருந்தால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், எந்த வகை குழந்தையாக இருப்பினும் நிச்சயம் முன்னேறும் என்கிறார் நூலாசிரியர்.
அதற்கு நம் கைவிரல்களைப் போலவே ஐந்து விரல்கள் தேவைப்படுகின்றன. முதல் தேவை ஆள்காட்டி விரல். சம்பந்தப்பட்ட பள்ளிக்கு உண்மையான ஆசிரியர்கள் கிடைக்க வேண்டும் என்பதைச் சுட்டும் விரல் இது. மாணவர்களின் உண்மையான இலக்குகளைப் புரிந்துகொண்டு கற்பிக்கும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் இருந்தால் ஆள்காட்டி விரல் சரியாக இருக்கிறது என்று பொருள்.
இரண்டாவது விரல், சிறிய பள்ளி, சிறிய வகுப்பறைகள். ஓர் ஆசிரியர் வசம் 25 - 30 மாணவர்கள் ஒப்படைக்கப்படலாம். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் கற்றல் மேம்பாட்டை எதிர்பார்த்து பயனில்லை. மூன்றாவது விரல், மாணவர்களின் தற்போதைய உண்மையான கற்றல் நிலையை அறியும் நோக்கத்தில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறது. அதிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரத்தை வைத்து முன்னேற வேண்டும். போலி பின்னூட்டங்களைப் பெறுகிற பள்ளி முன்னேற வாய்ப்பில்லை.
கட்டை விரல்: நான்காவது விரல், எவ்வளவு நேரம் ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. “காலையில் பள்ளியில் மணி ஒலிப்பதற்கு முன்வந்துவிடுங்கள்” என்று சொல்லும் ஆசிரியர், “பள்ளி முடிந்து இங்கேயே இருங்கள், இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று சொல்லும் ஆசிரியர், “கோடை விடுமுறையில் 10 நாள்களுக்குப் பள்ளிக்கு வரலாம் அல்லவா” என்று சொல்லும் வீட்டுக்குச் செல்ல அவசரப்படாத ஆசிரியர்...இப்படி எத்தனை பேர் அந்த பள்ளியில் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிடச் சொல்கிறது.
கடைசியாகக் கட்டை விரலுக்கு வருகிறார் நூலாசிரியர். அதுதான், பள்ளியை முன்னேற்றுவது ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட அர்ப்பணிப்பு மிக்க தலைமை ஆசிரியர். கல்வி அதிகாரிகளுக்காக, அரசு உத்தரவுகளுக்காகச் செயல்படாமல் பள்ளி மாணவர்களுக்காகச் சரியான இலக்குகளுடன் முன்னேற்றப் பாதையில் செயல்படுகின்ற தலைமை ஆசிரியர் தேவை. எல்லா விரல்களும் ஒழுங்காக இருந்தாலும் கட்டை விரல் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது.
இதுவே ஐந்து விரல் தத்துவம். இந்த ஐந்து விரல்களும் ஒரு பள்ளியில் சரியாக இருக்குமேயானால் எப்போது வேண்டுமானாலும் கல்வி அமைச்சர் அந்தப் பள்ளியைப் பார்வையிடலாம் என்பது உண்மைதானே.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT